Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல

          இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. வருடா வருடம் நடந்து வருவதுதான். 1063 மதிப்பெண்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற காரணத்திற்காக நெல்லையில் ஒரு +2 மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 'இது அப்பெண்ணின் தனிப்பட்ட முடிவு, கல்விமுறையிலோ சமூகத்திலோ குற்றமிருந்தால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்’, என்று இன்னமும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காகக் கல்வியைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்ததுதான் இந்த கல்விமுறை செய்த மகத்தான சாதனை. இந்தப் போட்டி நிறைந்த உலகில் வேறு வழி இல்லை என்று ஒரு வாதம் வேறு வைக்கப்படுகிறது. கல்விமுறை ஒழுங்காக இருக்கிறதோ இல்லையோ, எங்களது கல்விச்சூழல் நிச்சயம் சரி இல்லை. மாணவ மாணவிகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கட்டும், அதில் தவறேதும் இல்லை. அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் கடின உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டால் உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மாயத் தோற்றத்தை இந்த சமூகம் எங்களிடம் திணிக்கிறதே, அதுதான் பிரச்னை. இந்தக் கல்விமுறை எங்களுக்கு நல்ல கல்வியைத் தருகிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஒரு பொய்யான பிம்பத்தை எங்களுக்குக் காட்டுகிறதே, அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இந்தக் கல்விமுறையை எதிர்க்கிறோம்.

           இரண்டு வருடங்களுக்கு முன்பு +2 படித்தபோது எங்களுக்கும் இதே மனநிலைதான் இருந்தது. இப்பொழுது பள்ளிக்கல்வியை தூரத்திலிருந்து அதே மாணவக் கண்ணோட்டத்திருந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது, எந்த அளவிற்குத் தேவை இல்லாத ஒரு விஷயத்திற்காக எங்களை இந்த சமூகம் இவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது என்று. இன்று அந்த மாணவி தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் அடுத்த வருடம் இதனை உணர்ந்துக்கொண்டு ஒரு புன்முறுவல் பூத்து வாழ்க்கையைப் புதிய பரிமாணத்தில் எதிர்கொள்ள முனைந்திருப்பார். இது இன்றுடன் நிற்கப்போவதில்லை என்பது மட்டும் தெரியும். நாளையோ, அதற்கு மறுநாளோ, வேறொரு மாணவனோ மாணவியோ தங்களது விலை மதிப்பற்ற உயிரை நிச்சயம் மாய்த்துக்கொள்ளத்தான் போகிறார் என்பது வலிமிகுந்த நிஜம். நாம்தான் நம் இளைய தலைமுறையினருக்காகப் பெரிய மனது பண்ணித் திருந்த வேண்டும்.

விரிவான செய்திகள் கீழே உள்ள உரலி-யில்.
http://tamil.oneindia.in/news/2013/05/09/tamilnadu-2-girl-commits-suicide-near-nellai-174977.html

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்