Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வணக்கம் வாழவைக்கும் சென்னை!

சென்னை என்னை மாற்றிய அளவிற்கு இதுவரை வேறு எதுவும் என்னை மாற்றியதில்லை.

          புதிய பள்ளியில் பி.டி.மாஸ்டர் புதிய மாணவர்களைத் தனியாக நிற்க வைத்தார். ஒவ்வொருவரிடமும் எந்த ஊரு, என்ன ஆடுவ என்று விசாரித்துக் கொண்டே வந்தார். நானோ அப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதன்முதலாக ஒரு கூடைப்பந்து வலையைப் பார்க்கிறேன். அப்படியே வாய்பிளந்து நின்றுகொண்டிருந்தேன்.

“நீ எந்த ஊரு?”
“உன்னைத்தான்டா, பிஞ்சு போன நெட்டையே பாத்துட்டு இருக்க?”, அப்பொழுதுதான் கவனித்தேன்.
“எந்த ஊரு?”
“திருமங்கலம், மதுர கிட்ட”
”ஸ்கூல்ல என்ன ஆடுவ?”
“ஹும்ம்ம், கிரிக்கெட்! பெறவு கோலி, கிட்டிபுல், பம்பரம்…”, எதற்கு எல்லோரும் சிரித்தார்கள் என்று அப்பொழுது புரியவில்லை.
“என்னடா?”
“நெஜமா சார்! நல்லா வ்ளாடுவேன். கிட்டியில எக்ஸ்டிரா கிச்சாங் நான் கேட்டதே இல்ல”
“அதெல்லாம் இருக்கட்டும், வேற என்ன ஆடுவ?”
“பம்பரத்துல கோஸ் எடுத்துக் காட்டறேன் சார், கையில ரெண்டு நிமிஷம் சுத்தும்…”, சிரிப்பு அதிகமானது.
”என்னடா நக்கலா? புரியாதவன் மாரியே பேசிட்டு இருக்க?”

          அதற்குப் பிறகு பேந்தப் பேந்த விழித்தவன்தான், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த விளையாட்டுகள் சென்னையில் செல்லாது என்று புரிந்தது. திருமங்கலத்தில் வீரனாக இருந்த நான் சென்னையில் கண நேரத்தில் மொக்கைப் பையன் ஆகிப்போனேன். ஒவ்வொருவரும் தனிமையில் கிண்டலாக சிரித்துச் செல்ல, ”நீ வ்ளாடுவியா? கோஸ் எடுறா பாப்போம், கோஸ் எடுறா பாப்போம்!”, என்று விறைக்க ஆரம்பித்தேன். அதுவும் சென்னையில் காமெடியாகிப்போனது. சென்னை ஓரளவிற்குப் புரியவே எனக்கு இரண்டு வருடங்கள் முழுமையாகத் தேவைப்பட்டது.

          சென்னைக்கு வந்திறங்கிய புதிதிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் இதுவரை கேட்டிரவே கேட்டிராத சப்தத்துடன் வானத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் அந்த ராட்சச டமாரத்தை ஆவென்று இன்றுவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது ராடிசன் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று அங்கிருந்து என் ஊர் ஒற்றைப் பனைமரத்தின் நீளத்திற்கு ப்ளேன்கள் இறங்குவதையும் ஏறுவதையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஏன் என்று தெரியவில்லை, புதன்கிழமைதோறும் ஒரே ஒரு ப்ளேன் மட்டும் இராத்திரி ஏழே முக்கால் மணிக்கு திருப்பரங்குன்றம் மலையை சுற்றிக்கொண்டு என் ஊர் மேலே பறந்து செல்லும். மற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில் ஒரு நகரும் நட்சத்திரமாக ஒரு புள்ளிபோல் தெரிந்து மறையும் அதைப் பார்க்கவே ஊர் முழுக்க சீக்கிரம் சாப்பிட்டு தெருவில் இறங்கிக் காத்திருப்பார்கள். இன்று பங்க்கிலிருந்து பார்க்கும்பொழுது அங்கு பார்க்கும் ஏதோ ஒன்றுதான் சிறுவயதில் புள்ளியாக என் ஊர்மேல் பறந்து சென்றிருக்கும் என்று தோன்றும்.

          நான் பிறந்த பிறகு வைகையில் ஒருநாளும் தண்ணீர் ஓடியதே இல்லையா, அதனால் நூற்றுக்கணக்கில் லாரிகளும் ஆயிரக்கணக்கில் கிரிக்கெட் விளையாடுபவர்களும் நிறைந்த வைகை ஆற்றைத்தான் எனக்குத் தெரியும். பன்னிரண்டு வயதில் முதன்முதலாக அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பை நான் கண்ட அந்த பயங்கலந்த வினாடியில் எனக்குப் பிடித்த இடங்களில் முதல் இடத்தைப் பிடித்தது மெரீனா. இன்றும் தனிமையை விரும்பும்போதெல்லாம் நான் நாடும் இடம் மெரினாதான்.

          நம் எலக்ட்ரிக் ட்ரெயின் கிளம்பியதும் ”ஊஊம்”, என்று சங்கூதிக்கொண்டே செல்லுமே, பல முறை நோக்கமே இல்லாமல் தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை அந்த சப்தத்திற்காகவே இரயிலில் பயணித்திருக்கிறேன். இன்றும் ஒவ்வொரு முறையும் அதில் பயணிக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் அந்த இரயில் சப்தம் அதில் தினமும் பயணிக்கும் லட்சக்கணக்கானவர்களுக்குக் காரணமே இல்லாமல் தன்னம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருப்பதுபோல் தோன்றும்.

          சென்னை வந்த புதிதில் அட்ரஸ் தெரியாமல் “அண்ணே, அண்ணே”, என்று கூவியபடி பலமுறை எங்கெங்கோ தொலைந்து போயிருக்கிறேன்(கடைசியாக மவுண்ட்டுக்குத் தனியாகப் போகிறேன் பேர்வழி என்று க்ரோம்பேட்டை போய் சேர்ந்தேன்). இப்பொழுது பரவாயில்லை. பத்திரிகைப் பணிக்காக கொருக்குப் பேட்டையில் கொலை நடந்த வீட்டிற்குப் போகவும் வண்ணாரப்பேட்டையில் அம்மா காய்கறி அங்காடி இருக்கிறதா என்று பார்க்கவும் தெரியும் அளவிற்கு என்னறிவில் சென்னை விசாலமடைந்துள்ளது.

          சென்னை இதுவரை அரவணைத்துக் கொண்ட கோடானு கோடி வந்தேறிகளில் நானும் ஒருவன். அந்த நன்றியுடன் எனக்கு அடைக்கலம் தந்த இந்த விசித்திர நகரத்தை அதன் பிறந்த நாளன்று நினைவு கூர்கிறேன்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்