Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஷெர்லாக்கின் கடிதம்

          மனித உணர்வுகள் பற்றிய நமது தேடலில் நாம் அதிகம் மை சிந்திவிட்டோம். ஆனால் நம் கடிதப் போக்குவரத்து ஆரம்பித்தபோது நமக்கு அதைப்பற்றி என்ன புரிதல் இருந்ததோ, அதேதான் இப்பொழுதும் இருக்கிறது; நாம் இம்மியளவும் முன்நகரவில்லை. பல சமயங்களில் நான் ஒரு பெரும் பிளவின் விளிம்பில் நின்றபடி உரக்கக் கத்துகிறேன். அப்பொழுது மறுபக்கத்திலிருந்து வரும் பதில் உண்மையிலேயே உன்னுடையதுதானா, அல்லது அவை வெறும் என் வார்த்தைகளின் எதிரொலியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது; அந்த சந்தேகத்தில் வியப்புதான் மேலிடுகிறது. இக்கரையிலிருந்து நான் நோக்கும்போது, இந்த உலகின் நிம்மதியின்மைக்குக் காரணம் மனித உறவிற்கான தேடல்தானோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், இம்முறை எப்படியாவது மனித உறவுகளின் நடைமுறை வழக்கங்களைப் புரிந்துக்கொண்டுவிட வேண்டும், என்று முனையும் என் தோழியைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அவள் தோல்வியுற்று, அத்தேடலால் விளையும் காயங்களுக்கு மருந்தாக ஓயாத பொறுமையுடன் உடலுறவுச் சடங்கைப் நடத்திவிட்டு வருகிறாள். ஒவ்வொரு முறையும் விடை கிடைக்காமல் அவள் திரும்பும்போது, அவள் மேலும் மேலும் ஏமாற்றத்துடன் திரும்புவதுபோலவே இருக்கிறது.

          நான் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவனாகவே என்னை என்னிடம் நடத்திக்கொள்கிறேன். அதற்கு முக்கியக் காரணம், நான் பெரிதும் மதிக்கும் நபர்கள் அந்த உணர்வுகளாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்னப்படுவதைப் பார்க்கிறேன். ஆனால் என்னுடைய கபடமற்ற தனிமைப் பொழுதுகளில், நான் இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குக் காரணம், காதல்(வேறு நல்ல வார்த்தை கிடைக்கவில்லை) என்னும் மாய விளையாட்டை நான் புரிந்துக்கொள்வதில் தோல்வியுறுகிறேன் என்பதுதானோ, என்று தோன்றுகிறது. அதனால்தான் அந்த விளையாட்டை விளையாட நான் மறுக்கிறேனோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அடிப்படையில் என் கடந்தகால செயல்பாடுகள் மீது எனக்கு அப்பழுக்கற்றத் தெளிவுகள் இருந்திருந்தால், நான் செய்த பல செயல்களுக்கு இன்று நான் வருந்திக்கொண்டிருக்க மாட்டேன். மேலும் என்னுடைய மேம்பட்ட உள்ளுணர்வுகளை மீறி பிடிவாதத்துடன் உனக்கு எழுதிக்கொண்டிருக்கவும் மாட்டேன்.

          நான் உன்னை ஒரு சவாலாகப் பார்க்கிறேன்; நீ எனக்கு செய்த எல்லா கொடுமைகளையும் தாண்டி, உன்னால் நான் தூண்டப்படுகிறேன். எனவேதான் நம் உரையாடல், இதுவரை பயனற்று இருந்தாலும், இன்னும் தொடர்ந்தபடி இருக்கிறது. நாம் வியப்புக்குப் பஞ்சமற்ற, பதில்களற்ற வெளியில் மிதக்கிறோம். நம் மனதைக் குடைந்துக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு நாம் விடை காணுவதில் தோல்வியடைந்துவிட்டோமா? அல்லது அக்கேள்விகளுக்கு விடையே கிடையாதா? அதிர்ஷ்டவசமாக, நம் இருவரின் இச்சிந்தனையை இடைமறிக்க எதையேனும் இந்த உலகம் தொடர்ந்து வைத்திருக்கும். நம்மைத் தொந்தரவு செய்யும் இக்கேள்விகளிலிருந்து நம்மைத் திசை திருப்ப, இந்த உலகம் புதிய புதிர்களை நமக்கு அளித்தபடி இருக்கும்...

- SH

(CBS தொலைக்காட்சியின் 'Elementary' ஆங்கிலத் தொடரில் வரும் ஒரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு)

by SheenaBeresford

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்