Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

‘கக்கூஸ்’ ஆவணப்படம்

          தினமும் மலம் கழித்துவிட்டு பாத்ரூம் ஃப்ளஷை அமிழ்த்தி அந்த அருவருப்பான இதை உள்ளே தள்ளிவிட்டு வருகிறோம். நம்முடைய அந்த அருவருப்பான இதை ஒரு சகமனிதன் கைகளால் அள்ளி வீசுகிறான் என்ற உண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்? ‘ஹே அதுவும் ஒரு தொழில் மேன்’ என்றா? ‘அதான் சம்பளம் வாங்குகிறார்களே’ என்றா? ‘பிடிக்கலேன்னா வேற தொழிலுக்குத்தான் போகட்டுமே’ என்றா? தினமும் மலத்தை முகர்ந்து மூக்கைப் பொத்தி நகரும் நாம், இந்த உண்மையும் நாறுகிறது என்பதற்காக மூக்கைப் பொத்திக் கடந்துவிடப் போகிறோமா? அப்படியே கடந்தாலும் இம்முறை எவ்வளவு தூரம் விலகினாலும் நாற்றம் குறையாது, ஏனெனில் இம்முறை நாற்றம் நம்மிடமிருந்துதானே வீசுகிறது? நகரத்தில் சாதி இல்லவே இல்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? அல்லது ஒருவேளை தெரிந்தேதான் இந்த வஞ்சகத்திற்குத் துணை போகிறோமா?

          இதுவரை ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். உங்களை அந்தப் படம் துன்புறுத்தும், தூங்க விடாமல் துன்புறுத்தும். இல்லை குமட்டுகிறது, பார்க்க முடியவில்லை என்று அது கொடுக்கும் சாட்டை அடிகளை வாங்காமல் கணினியை அணைத்துவிடாதீர்கள். நமக்கு மிகவும் தேவைப்படும் அடி அது. நம் நகர அமைப்பு குறித்துதான் எவ்வளவு பெருமை நமக்கு? போட்கிளப் சாலையில் ஷூக்களை மாட்டிக்கொண்டு ஜாகிங் போகையில், டை கட்டிக்கொண்டு மெட்ரோவில் கம்பி பிடித்தபடி நிற்கையில், மால்களில் பாப்கார்ன் பொடிகளைத் தூவி கொறிக்கையில், என நம் நகரத்தின் கதையை நாம் எவ்வளவு அழகாக வரைகிறோம்? ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் மெல்ல மெல்ல நெருக்கப்பட்டு ஆற்றங்கரையோரத்தின் விளிம்பில் ஒளிந்துகொண்டிருக்கும் சேரிகள் வெளியே தெரிந்துவிட்டால் இந்தக் கதை நாறிவிடுமே? ‘சேரி பிஹேவியர்’ என்ற சொல்லாடல் சாதிய வன்மம் கொண்டது என்பதே போன வாரம்தானே நமக்குத் தெரியவே வந்தது? இந்த சேரிகளில் வாழும் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட பணியைப் புறக்கணித்து ஒழுங்காக ‘பிஹேவ்’ செய்யவில்லை என்றால் ஊர் நாறிப்போகும். அப்பொழுது ‘சம்பளத்திற்குத்தானே வேலை செய்கிறார்கள்’ என்ற நம் வாய் பொத்திக்கொண்டு ஓரமாய் நிற்கும். “ஆனால் அவர்கள் ‘பிஹேவ்’ செய்யவேண்டுமே? இல்லையென்றால் சமூகம் என்னாவது”, என உயர்ந்த தளத்தில் இருந்தபடி வறட்டுத்தனமாகப் பேசுவதுதான் நம் பிஹேவியரோ? சாதி குறித்து எதுவும் பேசாமல் ‘மிஷினைக் கொண்டா’ என்று மட்டும் கத்துகையில் நாம் எந்தளவிற்கு அயோக்கியர்கள் என்று தெரிகிறது. என்ன செய்யப்போகிறோம்? நாற்றத்தை முகர்ந்து அவர்களின் துன்பங்களை இப்பொழுதாவது புரிந்துகொள்ள முயலப்போகிறோமா? அல்லது ‘கேஸ்ட் இஸ் மை கல்ச்சர்’ என்று காலரை உயர்த்தி மீண்டும் கர்மா, வினைப்பயன், ஊழ் என போதனை செய்துவிட்டு உயர்ந்த உள்ளத்துடன் அவர்களுக்கும் சேர்த்து கோயிலில் வேண்டிக்கொள்ளப்போகிறோமா?

          இந்த நம்முடைய சமூகக் கட்டமைப்பின் அருமை பெருமையை வேறெந்த மிருகத்திற்காவது புரியவைத்தால், அது ‘சீ’ என்று நம் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு செல்லும். அடக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டு, முகத்தைத் துடைத்துக்கொள்ளாமல் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கலாம் வாருங்கள். இங்கு மனசாட்சி டிங்கரிங் செய்யப்படும்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி