Posts

Showing posts from January, 2016
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இக்கவிதை முடிவடைய விரும்புகிறேன்.

Image
“அரைசதம் அடித்தாயிற்று. இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதே ஒரு சாதனைதான்.”, என்று முகநூலில் பதிவிட்டதுபோல் நேற்றொரு கனவு கண்டேன். ஐம்பது வயதில் நான் என்னவாகியிருப்பேன்? தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரியும். குறைந்தபட்சம் இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகும் இக்கவிதை முடிவடைய.

“ஆண்”

Image
  பெண்களுக்கெதிரான வன்கொடுமை பற்றி ஓவியம் ஒன்று வரையத் துவங்கினேன். பத்து நிமிடங்கள் கழித்து கலைந்த கூந்தலுடன் நழுவிய சீலையைக்கூட பொருட்படுத்தாமல் முகத்தைக் கைகளால் தற்காத்தபடி அவள் அழுதுகொண்டிருந்தாள். திடீரென்று அவளுடைய கண்கள் என்னைப் பார்த்துக் கெஞ்சின, தன்னை அடிக்க வேண்டாம் என்று. கருணையுடன் அவளை நோக்கினேன். அப்பொழுது அவள் கண்கள், “இப்படி அடிக்கிறாயே, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?”, என்று கத்தியது. திடீரென்று வந்ததே பாருங்கள் கோபம். “என்ன திமிர் இவளுக்கு!”, என்று ஆவேசத்துடன் அவளுடைய கணவனை வரைந்து அவள் கைகளை விலக்கி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தேன். - வ.விஷ்ணு

மறுபிறப்பெடுத்த வலைப்பதிவாளன்

Image
அந்த வலைப்பதிவாளனுக்கு ஒரு பழக்கம். வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிடும் வேளையில் தான் மதிக்கும் வயதான ஆளுமைகளுக்கு அஞ்சலிப் பதிவை எழுத ஆரம்பிப்பான் அவன். ஆசையொன்றும் இல்லை அவனுக்கு. ஆனாலும் அந்த வலைப்பதிவாளனுக்கு இப்படி ஒரு பழக்கம். “அவர் சொன்னதுபோல், அரசிலைகளின் ஆதிக் குலவைக்குக் காதுயர்த்தித் திரும்பிப் பார்க்கும் காமதேனு நான்”, இது ஒரு கவிஞருக்கான பதிவில். “அதிகாலையில் சோம்பல் முறித்தபடி கடிகார ஒலியை அணைக்கும் முன் தலையங்கத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் என் தலைவனின் நினைவு எனக்கு வரும்”, இப்படி சேமித்து வைத்திருந்தான். “இதோ எனக்குப் பிடித்த இவரின் பத்து பாடல்கள்”, பட்டியலிட்ட பிறகு ஒருபடி மேலே போய் பதிவிற்குத் தலைப்பும் வைத்தான். இப்படித் தன் கணினியில் சேமித்து சேமித்து சமயம் வந்தபின் தன் வலைப்பதிவில் பதிவிட வைத்திருந்த அவன், ஒரு நாள் பாவம் இறந்தே போனான். அவனின் சில பதிவுகள் இன்னமும் பதிவிடப்படாத நிலையில், அவன் கணினியை நான் எடுத்துக்கொண்டு வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிட்ட வேளையில் அவனுக்காக சேமித்து வைத்திருந்த “மறுபிறப்பெடுத்த வலைப்பதிவாளன்” என

பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.

Image
பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.  மூன்றரை நிமிடங்கள் மென்று சுவரோரம் துப்பிக் கடக்கப்  பெட்டிக்கடையின் முன்னே நின்று சில்லறையைத் தேடுகையில்  அகப்படும் அந்தத் துண்டுச் சீட்டைக்  காணாமல் கசக்கி எறியும்போது  புகை இழுக்கப்பட்ட சிறுபீடித் துண்டின் முனையில் தினம்தினம் கருகுகின்றன‌ தாய்ப்பால் அழுகைகளும் சக‌உடல்வாசனைகளும் நிறைந்த நம் பயணங்கள். ஒரு குப்பைத் தொட்டி போதும். அடுத்தமுறை ஒரு குப்பைத்தொட்டியின் முன் நின்று உங்களது மகத்தான பயணத்தின் நினைவை சுமந்தபடி உங்களது மகத்தான பயணத்தை சாத்தியப்படுத்திய அப்பயணச்சீட்டை  குப்பைமேட்டுக் காற்றில் இறகென மிதக்கவிடுங்கள். - வ.விஷ்ணு