Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சத்யவரதன் குராயூர்



முகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார்.

“sariyaaka sonneerkal"

“நன்றி சகோ”, என்றேன்

ஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால்,

 


“ஏன் சார்?”, என்று ஏராளமாய் இளித்தேன்.

“நீயும் அந்த குரூப்புதானா?”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன்.

“ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே? படிக்கலியா?”

“உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார்.

“சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க”

“ஏன் இழுத்தா என்னடா பண்ணுவ?”

“அது உங்களுக்குத் தேவையில்லாதது. அரசியல் தலைவர்கள் பத்தி எதுவும் பேச வேணாம்னு இருக்கேன். மொதல்ல நீங்க எதுக்கு சார் இங்க வந்தீங்க?”

அதன் பிறகு ரிப்ளை எதுவும் வரவில்லை. திடீரென்று அவரே வந்தார், அவரே ஏதோ திட்டினார், போய்விட்டார். நீ, வா, போ, டா விளியெல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஏதோ ஆபீசில் கோபம் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு நான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் கீழே கருத்திடத் துவங்கினார். மகளிர் தினத்தன்று போட்ட ஒரு பதிவுக்கு, ‘பெண்ணுரிமையை மிஸ்யூஸ் செய்யும் பெண்கள்தான் அதிகம்’ என்று கருத்திட்டார். ரிசர்வேசன் பற்றிப் பதிவிட்டால் ‘ரிசர்வேஷனை மிஸ்யூஸ் செய்யும் ஓபிசிக்கள்தான் அதிகம்’ என்றார். மாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதனுக்கு முதலில் கொடுங்கள் பக்தர்களே, என்ற பதிவுக்கு மட்டும், ‘அங்கொன்னும் இங்கொன்னுமா நடக்கிற விஷயங்களை வைத்து மொத்த மதத்தையும் இழிவுபடுத்தக்கூடாது’, என்று மறுமொழி வந்தது.

பெரும்பாலும் நான் அவர் கருத்துகளுக்கு மறுமொழி அளிக்கவில்லை. என் நட்பு வட்டமே அந்த வேலையைப் பார்த்துக்கொண்டது. ஒவ்வொரு பதிவிலும் மேடைக்கு மேடை தர்ம அடி என்பதுபோல்தான் அவருக்கு இருந்தது. தர்க்கப்பூர்வமாக அடித்து நொறுக்கினார்கள் நண்பர்கள். ஆனால் மனிதர் அசரவே இல்லை. சுற்றிச் சுற்றி என் நம்பிக்கை, என் கருத்து என்று வலியுறுத்தினார். பேங்க் லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தைப் போல் மாற்றுக்கருத்துகளை உள்ளே விடாமல் மூளை வெகு பத்திரமாக இருந்தது.

துர்நிகழ்வாக ஒரு நாள் இந்தப் பஞ்சாயத்திற்குள் நான் இறங்க நேரிட்டுவிட்டது. ‘நேரு பிறந்த நாள் சிறப்புப் பதிவு’ என்ற ஒரு கட்டுரையை நான் என் பக்கத்தில் பகிர்ந்த பத்தாவது நிமிடம், கீழே முதல் ஆளாக ‘படேல் பி.எம். ஆகியிருக்கணும்’, என்று ஒருவர் கொளுத்திப்போட, சத்யவரதன் அதற்குக் கீழே ‘எல்லாம் எட்வினா கடாட்சம்’ என்று ஒரு வெடியைப் போட்டார். அவ்வளவுதான். நேருவியர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வர, பதிலுக்கு மெஜாரிட்டி சூலாயித டி.பி.க்கள் கோதாவில் இறங்க, குபுகுபுவென்று என் முகநூல் பக்கம் பற்றியெரியத் துவங்கிவிட்டது. என்னதான் சத்யவரதன் அசகாய முகநூல் சூரர் என்றாலும் ஒரு அளவுக்கு மேல்தானே தாக்குப்பிடிக்க முடியும்? மனிதர் தன் சக்திக்கு மீறி வம்பிழுத்துக்கொண்டிருந்தார். சுற்றியுள்ள சப்போர்ட்டைப் பார்த்து மயங்கி ‘நேருவும் சோசியலிசமும்’ என்று எதையோ சத்யவரதன் போட, அதுவரை சும்மா இருந்த கம்யூனிஸ்டுகளும் களமிறங்கிவிட்டார்கள். நேரில் எப்படியோ, முகநூலில் அனைவரும் வாட்ட சாட்டமாக இருந்தார்கள். பலமாக அடித்துக்கொண்டார்கள். இருபதாவது நிமிடத்தில் முத்தாய்ப்பாய் ‘சீனப்போரில் யாருக்கு சப்போர்ட் செய்தீர்கள் கம்மூஸ்?’ என்று கேங்க் வாருக்கு வித்திட்டார் சத்யவரதன்.

அடுத்த அரைமணி நேரத்தில் யார் யாரிடம் பேசுகிறார்கள் என்றே தெரியாமல் புகை மூட்டமாக இடம் மாறிப்போயிருந்தது. மரண பயமின்றித் தளபதிகள் தீரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். மேலே ஸ்க்ரோல் செய்து பார்த்தபோது நேருவுக்கு எக்ஸ்ட்ராவாக சில முடிகள் கொட்டியிருந்தது. என்னைப் பார்த்து பாந்தமாக ஒரு சிரிப்பு சிரித்தார். ‘எட்வினாவைத் தாயாக்க ஆசைப்பட்டு பாரதத் தாயை விற்றுவிட்டார் நேரு’, என்று அசிங்கமாக ஒரு கமெண்ட் நடு முற்றத்தில் கிடந்தது. ஒரு இடத்தில் இந்துத்துவாவும் நேருவியரும் சிங்கில்ஸ் என்றால் மற்றொரு இடத்தில் கம்யூனிஸ்ட்டும் இந்துத்துவாவும் சிங்கில்ஸ். சில இடங்களில் சைன்ய சைன்யமாக மோதிக்கொண்டார்கள். ஒரு இடத்தில் இந்துத்துவாவும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி போட்டு நேருவைத் தாக்கியதைப் பார்த்தபோது மீண்டும் ஒரு முறை மேலே ஸ்க்ரோல் செய்து நேருவைப் பார்த்தேன். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இந்தியாவைப் போல் மாறியிருந்தது களம். நடுவில் வேறு ஒருவர் லிங்க் லிங்காகப் போட்டு, ‘படித்துவிட்டுப் பேசுங்கள், படித்துவிட்டுப் பேசுங்கள்’ என்று தனியாகப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று ‘சத்யவரதன் குராயூர் கமெண்டட்’ என்று அறிவிப்பு வர, ஒரு ஓரமாக அவர் இன்னும் போரிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வாட் எ மேன்..! அவரின் வாதங்கள் அவர் மெல்ல மெல்ல சோர்வடைந்து வந்திருக்கிறார் என்பதைக் காட்டின. பிற பதிவுகளில் இருந்த பின்னூட்டங்களைக் காப்பி பேஸ்ட் செய்து இங்கு கொடுத்துக்கொண்டிருந்தார். போர்க்களத்தில் அவரின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்று அறிய மேலே ஸ்க்ரோல் செய்தேன்.

எட்வினா கமெண்ட் ஆச்சரியமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது. ‘நேருவும் சோசியலிசமும்’ பகுதியை கம்யூனிஸ்டுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் என்று ஹைஜாக் செய்துவிட, அது கருந்துளையாகிப் போயிருந்தது. அதற்குள் சென்றவர்கள் மீண்டும் திரும்பவேயில்லை. கிட்டத்தட்ட சத்யவரதனை யாரும் கண்டுகொள்ளாத நிலை. அந்த சமயம் பார்த்து ஹெட்கேவர் டி.பி. வைத்த அவதாரம் ஒன்று ‘இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று இருபத்தியொரு லைக்குகள் முழங்க ஆணை பிறப்பித்திருக்க, சத்யவரதன் குராயூர்தான் இந்தக் கூட்டத்தின் தலைவனாக இருக்கவேண்டும் என்று சீட்டுக் கணக்கு போட்டு சம்பந்தமேயில்லாமல் அவரைத் தாக்க ஆரம்பித்திருந்தார்கள். அந்தக் களத்தில்தான் குராயூரார் இன்னும் போரிட்டுக் கொண்டிருந்தார். சில தனிப்பட்ட தாக்குதல்கள் அருவெறுப்பை உண்டாக்கின. சுற்றிலும் ஒரே குப்பையாகக் கிடந்தது. உணர்ச்சி வேகத்தில் சத்யவரதனின் தாயையும் மனைவியையும் திட்டியிருந்தார்கள் சில லிபரல்கள். அதை அவர் கண்டுகொள்ளாமல் மறுமொழியிட்டதைப் பார்த்ததும், ஒரு உந்துதலில் அவருக்கு சப்போர்ட்டாகக் களமிறங்கினேன்.

விவாதம் அதோடு முடிந்தது. தனிப்பெட்டியில் அந்த நபர் வந்து,

என்று முறைத்துவிட்டுச் சென்றார். 

நேரு பிறந்த நாள் சிறப்புப் பதிவை எழுதிய எழுத்தாளருக்கு இதெல்லாம் பிற்பாடுதான் தெரிந்திருக்கிறது. தன் பக்கத்தை விட இந்தப் பக்கம் அதிகமாக இரத்தக்காவு வாங்கியிருக்கிறதே என்று பின்னூட்டத்திற்கு வந்து, ‘நேருவை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று ஆரம்பித்தார். ‘எல்லாம் முடிஞ்சாச்சுப்பா கிளம்பு’ என்று நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

‘ப்ளிங்!’, என்று தனிப்பெட்டி அழைத்தது. “நன்றி தம்பி”, என்று சத்யவரதன் செய்தியனுப்பியிருந்தார்.

“எதுக்குங்க நன்றியெல்லாம். சுத்தமா உங்ககிட்டேர்ந்து முரண்படுறேன். ஆனா தனிப்பட்ட அளவுல தாக்காம இருக்கணும் அவ்வளவுதான்”

சில வினாடிகள் கழித்து, “சாரி தம்பி’, என்றார். “அன்னிக்கு நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது”

“சார் பரவால்ல சார். இதுல என்ன இருக்கு... வாங்க உரையாடிட்டே இருப்போம்”

“தம்பி என்ன பண்றீங்க? எந்த ஊரு?”

“என்னைப் பத்தின விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்னா, about tab க்ளிக் பண்ணி பாத்துக்குங்க. அதுக்கு மேல முகநூல்ல அறிமுகமான புதிய நண்பர்களுக்கு என்னைப் பத்தி சொல்ல எதுவுமில்ல”, என்று பேச்சை அத்துடன் துண்டித்தேன்.

அதன்பிறகு அவ்வப்போது என் தனிப்பெட்டியில் உரையாட வருவார். அவரிடம் சாதி வெறி இருந்தது. தன் மதமே உயர்ந்த மதம் என்ற பிடிப்பு இருந்தது. பெண்ணியம்  எல்லாம் ஏற்கனவேயே நம் சமூகத்தில் இருந்து வருவதுதான் என்றார். அவரும் நானும் எந்தக் கருத்திலும் ஒத்துப்போகவேவில்லை. திராவிட இயக்கம் தமிழகத்தை நாசம் செய்துவிட்டது என்றார். கம்யூனிஸ்டுகளை தேச விரோதிகள் என்றார். அந்நியப் படையெடுப்பு அந்நியப் படையெடுப்பு என்றார். காலத்தின் கோலம், காந்தி கொல்லப்பட்டார் என்ன செய்வது என்றார். எல்லாம் அந்தக் காலத்திலேயே ரிஷிகள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றார். கருத்துப் பரிமாற்றம் என்னவோ இரு பக்கமும் இருந்தது. ஆனால் நான் சொன்னது அவர் மண்டையில் ஏறியதா என்றே தெரியவில்லை. பெரும் பாறையென அசையாது நின்றார். அவரைப் போல் பல பேரிடம் நான் உரையாடி, இதற்குமேல் இவர்களிடம் உரையாடுவது வீண் என நகர்ந்திருக்கிறேன். ஆனால் அவரிடம் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்தான் என் தனிப்பெட்டியில் அழைத்தார். அதற்கு முன்தினம்தான் கடுமையாக வாக்குவாதம் செய்திருப்போம். அடுத்த நாள் ஒன்றும் நடக்காததுபோல் சாப்பிட்டியா தம்பி என்று விசாரிப்பார். என் மீது கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதே நேரத்தில் மாற்றார் கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள எந்த சிறு முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

ஒரு கோணத்தில் இ.என்.டி.பி. பெர்சனாலிட்டியைப் போல நடந்துகொண்டார். கருத்தின் அரசியல், அதன் சமூக விளைவுகள் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றிப் பேசினால் அவருக்கு ஒரு கிக் வந்தது. எனவே பேசினார், அவ்வளவே. மற்றபடி உரையாடலால் செதுக்கப்படத் தன்னை அனுமதிக்கவேயில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு அறிவுப்பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. அவர் சிந்தாந்தங்களை நல்ல வேளையாக நான் கடந்துதான் வந்திருந்தேன்.

இரண்டு நிமிடங்கள் கழித்து, “நீ சொல்றது கரெக்ட்டு மாதிரிதான் படுது தம்பி”, என்றார். முதன்முதலாக ‘அசைந்தார்’. ஆனால் கொசுறாக, “ஆனாலும் நீ அவங்களோட என்னை கம்பேர் பண்ணியிருக்கக் கூடாது”, என்றார். நான் களுக்கென்று சிரித்தேன். “ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்ல சார். இன்னொரு நாள் பேசலாம்”, என்று அரைப்புள்ளி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றேன். இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் அடுத்த நாள் இவரை சந்தித்துவிடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன்.

மறுநாள் நண்பகல் போல் மயிலாப்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்க சென்றேன். நெடும் வரிசை. குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஆகிவிடும்போல் இருந்தது. அரசாங்க அலுவலகக் காத்திருப்பிற்கு அரைமணி நேரம் என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் சரியாக என் நேரம் வரும்போது அதிகாரி மதிய உணவு சாப்பிட சென்றுவிடுவாரோ என்று ஒரு உணர்வு இருந்தது. மிகச் சரியாக அதுதான் நடந்தது. “லஞ்ச் டைம், இரண்டரைக்கு வா”, என்று வெடுக்கென எழுந்துவிட்டார் அதிகாரி. ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிக்கலில்லை என்று அலைபேசியை வெளியே எடுத்தேன். “தம்பீ..!”, என்று அருகில் ஒரு குரல்.

“சொல்லுங்க சார்”

“லஞ்ச் சாப்பிடப் போயிட்டார் போல”

“ஆமா சார். ஒன்றரை மணி நேரம் ஆகுமாம்”

“அடடா..! ரொம்ப ஸ்ரெமம் இல்ல?”

“லஞ்ச் டைம் சார். அவங்களும் சாப்பிடணுமே”, என்றேன்

என்னை உற்றுப் பார்த்து, “குராயூர் ஸத்யவரதன். நைஸ் டு மீட் யூ”, என்று கை நீட்டினார்.

அந்தப் பெயரைக் கேட்டதும் சட்டென்று பதறிப்போய் அவரை வெறித்துப் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.  அவரோ ‘அஹ்ஹாஹ்ஹா, வரம் தந்தேன்’ என்பதுபோல் காட்சியளித்தார். “நீங்க எங்க சார் இங்க?”

“நான் இங்கதான்பா ஆர்.ஏ.புரம்.”

“நீங்க இந்தூருன்னு சத்தியமா நான் நினைக்கல சார்”

“நீ இந்த ஏரியாதான்னு நேக்கு தெரியுன்டாத்தம்பி. About tab-ல பாக்க சொன்ன. கொஞ்சம் ஹார்ஷா சொன்னியா, எதுக்கு என் அட்ரஸ்ஸைக் கொடுக்கணும்னு விட்டுட்டேன்”

“ஹார்ஷா? ஐ ஆம் சாரி சார். டெர்ரிப்ளி சாரி”, என்றேன் குற்ற உணர்ச்சியோடு. என் எதிரில் இருந்த மனிதருக்கு சுமார்... எத்தனை வயதிருக்கும்?

“என்ன பாக்கற? எழுபது முடிஞ்சு எழுபத்தொன்னு தொடங்கறது”, என்றார் புன்னகைத்தபடி.

ஆக என் எதிரில் இருந்த குராயூர் சத்தியவரதனுக்கு எழுபத்தியொரு வயது. தாத்தா உறவு. நடுவில் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. எழுபத்தியொரு வயது மாதிரியா முகநூலில் நடந்துகொண்டார்? எழுபத்தியொரு வயது நபர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

“எழுபத்தியொரு வயசுன்னு ஃபேஸ்புக்குல சத்தியமா தெரியல சார். எப்டி சார்? கிரேட்..!”, என்று இயல்பாகக் குதூகலித்தேன்

“என் பையனைப் பாக்க யூவெஸ் போயிருந்தேன். அங்க ஒரு ஃபோனை வாங்கிக்கொடுத்து இதைப் போட்டுக்குடுத்தான். அப்டியே கடகடன்னு கத்துண்டுட்டேன்டா”, என்றார் பெருமிதமாக.

“பின்ன, அதுவும் முன்ன பின்ன தெரியாதவனை வெக்கங்கெட்டவனேன்னு சொல்றதெல்லாம், செம இம்ப்ரூவ்மெண்ட்தான்”

“வேற ஒருத்தரால இப்படிக் கத்துக்க முடியுமா?”, என்றார்.

“வேற ஒருத்தர்னா?”, அவர் எதைக் குறிக்கிறார் என்று புரிந்தது

“சும்மா விளையாடினேன்டா”

“விளையாடுற விஷயம் இல்ல சார் இது”

“சரி, என் நெத்தியில என்ன இருக்கு?”, என்று வேண்டுமென்றே சீண்டினார்.

“ஜாதி இருக்கு”, என்றேன் மையமாக. அதே உணர்வில் “ஊரு முழுக்க அத நீங்க பெருமையா வேற காட்டிட்டு இருக்கீங்க”, என்றும் சேர்த்து சொன்னேன்.

“என்னை மக்குன்னு நெனச்சுட்டியா? ஆர்ட்டிகிள் 25 டா”

“ரைட்டுங்க”

“இதோ ஆதார் ஃபோட்டோவுலயும் இப்படித்தான் போஸ் குடுக்கப்போறேன். என்ன பண்ண முடியும்?”, என்று சவால் விட்டார்

“ஒன்னும் பண்ண முடியாது சார். ஆனா ஆதார் ஃபோட்டோவுல இதெல்லாம் தேவையில்லங்கிறது என் ஒப்பினியன்”

“ஏன் ஏன் ஏன்? ஏன்கறேன்?”, மனிதர் விடவில்லை

“ஆதாருல என்னென்ன அடையாளத்தையெல்லாம் கேக்குறாங்க? ரெட்டினல் ப்ரிண்ட் கேக்குறாங்க, கைவிரல் ரேகை எடுக்குறாங்க, புகைப்படம், அடிப்படைத் தகவல்கள், இவ்வளவுதானே? கூடுதலா எதுக்கு நம்ம சாதியடையாளத்தைத் தரணும்?”

“முசல்மானுக்குக் குல்லாய் மாதிரிடா இது”

“அய்யய்யோ ஆள விடுங்க. இஷ்டப்படி பண்ணுங்க, உரிமை இருக்கு உங்களுக்கு”, என்றேன். அவரின் சாதியடையாளம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் ஐஸ் பிரேக்கர் போல் ஆனது அந்த விவாதம். சக பயணி என்ற அளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அறிவையும் உறவையும் என்னைப் போலவே பிரித்துப் பார்க்கும் ஒரு ஜீவன். ஒரு சாதி மத ஆணாதிக்க வெறியரிடம் இந்த நெருக்கம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே மாட்டேன்.

“இப்பவாவது சொல்லலாமே? என்ன பண்றன்னு? ஃபேஸ்புக்குலதான் ஹார்ஷா இல்ல நேர்லயும் அப்படித்தானா?”

மீண்டும் குற்ற உணர்ச்சி, “அய்யோ சார் நீங்க இதை இவ்வளவு சீரியசா எடுத்துப்பீங்கன்னு நினைக்கல சார். ரொம்ப சாரி. யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயார் பண்ணிட்டிருக்கேன்”

“ஓஹோ!”, என்றபடி சிரித்தார். “அதான் தலைவர்கள் பத்திப் பேச மாட்டேன்னுட்டியா?”

“ஆமாம்”

“இங்கேந்து நடக்கற தூரந்தான். ஆத்துக்கு வர்றியா?”

“கண்டிப்பா வரேன் சார். எத்தனை வருசமா இங்க இருக்கீங்க?”

“என் ஃபேஸ்புக் போய் About tab க்ளிக் பண்ணு. அதுல இருந்தா பாத்துக்கோ”, என்று மீண்டும் வாரினார்.

“தெய்வமே! மன்னிச்சுடு தெய்வமே”, என்றேன் சிரித்தபடி.

அவர் வீட்டில் சுவாரசியமாக எதுவும் இல்லை. ரிட்டையர்டு எஞ்சினியர் என்றார். எமர்ஜென்சி காலத்தில் துக்ளக்கைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். எதிர்பார்த்தபடி விஜயபாரதம் இதழ்கள் கிடந்தன. காபி வேண்டாம் விட்டுவிட்டேன் என்று சொன்னபோது ஒரு கணவன் - மனைவி ஜோக் அடித்தார். “எத்தன வருசமா இவரு இதையே சொல்லிட்டிருக்காரு பாட்டி?”, என்று உரிமையுடன் கேட்டேன்.

கிளம்பும்போது, “டெக்னாலஜில நான் கொழந்தடா. என்னன்னமோ பண்றா ஃபேஸ்புக்குல. அது மூலமா மனுஷா கெடைப்பான்னு நெனச்சு கூட பாக்கல. எப்போ வேணுன்னாலும் ஆத்துக்கு வாடா. தனியா இருக்கு இங்க”, என்றார்.

“உங்களுக்காவது ஃபேஸ்புக் இருக்கு சார். அவங்களுக்கு?”

“ஏதோ பொழுதைப் போக்கிண்டு இருக்காடா. நீ வந்ததுலேந்து யாரு இவன் நம்மளவாளா நம்மளவாளான்னு கேட்டுண்டே இருக்கா. நீ யாருன்னு தெரியல, அதுதான் அவளுக்குக் கொஞ்சம் உறுத்தறது”

மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் இரண்டு முதியவர்களைத் திருந்தாத ஜென்மங்கள் என்றெல்லாம் நினைக்க முடியவில்லை.

“அது என்னமோ தெரியலடா. என்ன ஆளுகன்னு தெரிஞ்சுக்கறதுல்ல ஒரு இது. இது எல்லா ஆளுகளுக்கும் உண்டுடா”, என்றார் என் தோளில் கைபோட்டபடி. “நான் இப்படிப் பேசுறதை ஜனங்க தப்பா புரிஞ்சுப்பாளோ?”

“தப்பாதான் சார் நீங்க பேசுறீங்க. நான் வரேன்”, என்று கிளம்பினேன். கிளம்பும் முன் ஃபோன் நம்பர் வாங்கிக் கொண்டார். ஆனால் அவரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவேயில்லை. அவருக்கு என்னோடான முகநூல் அரட்டைதான் பிடித்திருந்தது. “அந்த காலத்துல நாங்க எழுதின லெட்டர் மாதிரிதான்டா இருக்கு. எப்ப வேணாலும் எடுத்துப் படிச்சுக்கலாம் பாரு”, என்று அன்றிரவு ஒரு இளிப்பு ஸ்மைலியைப் போட்டார்.

அதன் பிறகு அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவர் வீட்டில் எட்டிப்பார்க்கலாமா என்று தோன்றியது. சாதி பார்க்கிறார்களே என்று இரண்டு முறை போகாமல் விட்டுவிட்டேன். பிறகு முதியவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று என்றாவது அரிதாகப் பார்த்து வந்தேன்.

நாட்கள் செல்ல செல்ல சத்யவரதன் என் வாழ்வில் சாதாரண ஆசாமியாகிவிட்டார். சத்யவரதன் குராயூர் என்றவுடன் என் புருவங்கள் இனியும் உயரவில்லை. என் பல நட்புகளில் ஒரு நட்பாக மாறிப்போனார். உரையாடல்கள் மட்டும் என்றாவது நடக்கும், ஆனால் முன்னுரிமை எதுவும் இல்லாமல், சத்யவரதன் என்று தனியாகத் தெரியாதபடி இருந்தது.

சில நாட்கள் கழித்து அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். முகநூலில் மும்முரமாக இருந்தார். திடீரென்று என் பக்கம் திரும்பி, “ஏதோ லிகசி கான்டாக்ட்னு இருக்குடா. செத்ததுக்கப்பறம் அனவுன்ஸ் பண்ணுமாமே?”

“ஆமாம் சார்.”

“உன்னை அதுவா ஆக்கிடறேன்டா. பாத்துக்கோ”

இதைக் கேட்டதும் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை என்னால் எவ்வளவு முயன்றாலும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இது ஒரு புது வகையான அனுபவமாக இருந்தது. இயற்கையை மீறி அஜினமோட்டோவைப்போல் இருந்தது. இப்படித்தான் விவரிக்க முடிகிறது. இதற்கு என்ன உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று உள்ளம் தாறுமாறாக இயங்கி முடங்கி, ஒரு நிலைக்கு மீண்டும் வர சில மணி நேரங்கள் ஆயின. ரொம்ப நாட்களாக மனதில் உள்ள ஒன்றை சொல்லிவிடலாமா என்று தோன்றியது. இது நடந்தது பதினொரு நாட்களுக்கு முன்னால்.

போன வாரம் என்றுமில்லாததாய் திடீரென்று அலைபேசியில் அழைத்தார். பாட்டியின் குரல். “காலம்பற பொத்துனு சரிஞ்சுட்டாருடா. எதுத்தாத்துல சொல்லி காளியப்பாவில சேர்த்திருக்கோம். கைகால் ஓடல கொஞ்சம் சீக்கிரம் வா”

பதறியடித்து ஓடினேன். கொரோனரி என்றார்கள். மனிதர் நெஞ்சைப் பிடித்தபடி முழித்திருந்தார். வியர்த்திருந்தது. பைபாஸ் செய்யவேண்டும் என்றுவிட்டார்கள். நுரையீரலில் அதிக இரத்த அழுத்தம் இருக்கிறது, நல்லவேளை பல்மோனரி ஆகவில்லை, இல்லையென்றால் வலது வென்ட்ரிக்கிள் செயலிழந்து போயிருக்கும் என்றார்கள். பாட்டியால் அவர் இருந்த கோலத்தைப் பார்க்க முடியவில்லை. வெளியேவே உட்கார்ந்துவிட்டார்.

சத்யவரதன் கைகள் நடுநடுங்க என் விரல்களைப் பிடித்துக்கொண்டார். “பையனை வரசொல்லிட்டேன்டா. இன்னும் மூணு நாள்ல வந்துருவான். அதுவரைக்கும் கூட இருடா”

“இருக்கேன் சார்”, என்றேன். அவர் முன்னால் அழுது தொலைத்து அவர் தைரியத்தைக் குறைக்கக்கூடாது என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

“ஃபேஸ்புக்க நேக்கு ரொம்ப பிடிச்சுடுத்துடா. அறுபதுகள் காலத்துல இதெல்லாம் இருந்திருந்தா இன்னும் நன்னா இருந்திருக்கும். மூணு வேளையும் இதுல உக்காந்திருப்பேன். ஏன்னா நான் பெருசா உறவு கிறவுலாம் சம்பாதிச்சுக்கலடா. இதோ ஃபேஸ்புக்குல சண்டை போட்டேனே இவாதான் நேக்கு. ஏதாவதுன்னா என்னை திட்டினவா, சப்போர்ட் பண்ணினவா எல்லாருக்கும் சொல்லிடு. சொல்லிடுறா. மறந்துறாத என்ன?”

“சரி சார்”, என்றேன். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்...”

“என்னடா? சொல்லு”

“என் சொந்த ஊரும் குராயூர்தான். தாத்தா வாழ்ந்த ஊரு”

அவர் கண்கள் அகல விரிந்தன. “அப்படியா? உன் தாத்தா பேரு?”

“கோபாலன்”

ஆச்சரியத்தில் அவர் முகம் மொத்தமாக மாறியது. “கரண்ட்டு கோபாலனா?”

“ஆமாம் அவரேதான்”

“பாவி... சொல்ல மாட்டியா? எங்க சைடுல லெஜன்டுடா அவரு. லைன் மேன்னா அவருதான். ஏன் என்கிட்ட நீ முன்னாலயே சொல்லல?”

“நான் யாருன்னு தெரிஞ்சிடுமே அப்புறம்”, கலங்கிய கண்களோடு அவரைப் பார்த்தேன்.

சிரித்தார். “தெரிஞ்சு போச்சுடா. நீ யாருன்னு தெரிஞ்சு போச்சு. இப்பதான்டா நிம்மதியா இருக்கு”, என்றார். “அவகிட்ட இதை சொல்லிடாத. சொன்னாலும் தெரியப்போறதில்ல, அவ வேற லெக்கு. இருந்தாலும் எதுக்கு... கோபாலன் இப்போ?”

“இல்ல. தொண்ணூத்தி எட்டுலியே போய்ட்டாரு. ரொம்ப மிஸ் பண்றேன் அவரை”, குரல் தழுதழுத்தது. “ரொம்ப வருஷமா தலித்துகளை குராயூர் பள்ளிக்கூடத்துல விடலையாமே? தாத்தா இருந்திருந்தா அதைப் பத்திக் கேட்டிருப்பேன்.”

“ஆமாம். அதுகள்ளாம் என்னத்துக்குன்னு விடலை”, என்றபடி என்னைப் பார்த்தார். “அப்படிப் பாக்காதடா. திருந்தாத ஜென்மம்னுதானே பாக்கற?”

நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.

“ஒரு க்ஷணத்துல சட்டுன்னு பழைய ஞாபகத்துக்குப் போக வெச்சுட்டியேடா. கரண்ட்டு கோபாலன் பேரனா நீ? ஏன்டா ஊர் பேரையெல்லாம் சொல்லாம இருக்கலாமாடா? இந்த கம்யூனிஸ்டுங்கதான் சும்மா ஊரு இல்ல, நாடு இல்லன்னு சொல்லிண்டிருப்பா. பொத்துனு சீனா கால்ல விழுந்தாளா?”

அந்த அழுகையிலும் சிரிப்பு வந்தது. “ரெஸ்ட் எடுத்துக்கோ தாத்தா”, என்றேன் அவர் கைகளை விடாமல்.

அடுத்த நாள் விடியற்காலை அவர் உயிர் பிரிந்தது.

மகன் வர இரண்டு நாட்களாகும் என்பதால் ஸ்கைப் மூலமாகக் காரியங்களை செய்தார்கள். அப்பாவை வீங்கிய கண்களோடு மானிட்டர் ஸ்க்ரீனில் மகன் பார்த்துக்கொண்டிருந்தார். “அமெரிக்காவுல எங்கூடவே இரு பாட்டி”, என்று ஆறு வயது பேத்தி ஒப்பித்தாள். அன்றிரவு லிகசி கான்டாக்ட் என்ற முறையில் இறப்புச் செய்தியை அவரது பக்கத்தில் அறிவித்தேன். முகநூல் நண்பர்கள் சிலர்தான் இருந்தார்கள். எனக்குத் தெரிந்து உறவுகள் யாரும் நண்பர்களாக இல்லை. அங்கு செய்தியைத் தெரிவித்துவிட்டு என் முகநூல் பக்கத்திலும்,
 
நேற்றிரவு ‘பல்கலைக்கழகங்களில் அரசியல்’ என்னும் நண்பரின் பதிவின் கீழ் கருத்திட்டுக் கொண்டிருந்தேன்.

பொளுக்கென்று அழுகை வந்தது. சத்யவரதன் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும்போல் இருந்தது. ஆரம்பித்தேன்.

//முகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்பு விண்ணப்பம் அனுப்பினார். நான் அழைப்பை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார்.

“sariyaaka sonneerkal"

...

Comments

  1. முழுமையாக, பொறுமையாக படித்தேன். இன்னதென்று தெரியாத உணர்வு உள்ளூடுகிறது. உங்களின் எண்ணங்களும் எழுத்தும் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு தோழர்....

    ReplyDelete
  3. கண்ணீரை வரவழைத்துவிட்டது.
    ஆழ்மனதில் பதிந்து விட்ட கருத்துக்களை மாற்றல்
    கடினம்.

    பெரியார் மார்க்ஸ் பதிந்த மனம்போன்றே
    பக்தி சாதி சார்ந்த ஆட்களுக்கும் மாறாமனம்

    ReplyDelete
  4. great pudhusaa sila visiyam katrukittaen... naan kaatuthanama aathigavaadhigalai yedhirpaen ... ini kanivaa yedhirpaen

    ReplyDelete
  5. மிகவும் அற்புதமான பதிவு.பரிந்துரைத்த நெல்சன் சேவியருக்கு நன்றி

    ReplyDelete
  6. மாறுபட்ட கருத்துக்கள் என்றாலே எதிரி அல்ல...புத்திக்கும், உணர்வுக்கும் இடையே சிறிய கைகலப்புதான். நெ ஞ்சை தொட்ட ஒரு பதிவு.

    ReplyDelete
  7. Excellent piece of writing. Gripping words. All the best. !!

    ReplyDelete
  8. அறுமையான நடையுடன் அற்தங்கள் பொதிந்த கட்டுரை.

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்