Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

livemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------

Photo: Hindustan Times


தோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பை நினைவுபடுத்தும்.

இந்திய கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்சிங் முறைகேட்டில் சிக்கி அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம் அது. ஐ.பி.எல். தொடரில் வரிசையாக சில பிரபல தலைகள் உருண்டன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சட்டத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.

தன் அணியை வைத்தே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் குற்றம் சாட்டப்பட்டார். கிட்டத்தட்ட ‘உள் ஆள் வர்த்தக’த்திற்கு இணையான குற்றச்சாட்டு அது. அப்போதைய பிசிசிஐ தலைவரான என்.சீனிவாசனின் மருமகன் அவர். குற்றச்சாட்டு வந்ததும் உடனடியாக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, வெறும் ‘கிரிக்கெட் ஆர்வலர்’தான் அவர், வேறு யாரும் இல்லை என்று காட்டப்பட்டார். இதுபோக சீனிவாசன் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனரும் கூட. இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வைத்திருக்கிறது. இந்த முடிச்சு ஏற்படுத்திய குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்திய செய்தி, தோனிதான் இந்த இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவர்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டபோது அதுகுறித்த கேள்விகளை தோனி தவிர்த்தே வந்தார். இங்கிலாந்து கிளம்பும் முன் அந்த 2013 பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து தோனி ஏதேனும் கருத்து தெரிவிப்பார், கிரிக்கெட்டை நம்பலாமா என்று குழப்பத்தில் இருக்கும் கடைக்கோடி ரசிகருக்கு நம்பிக்கையான வார்த்தைகளை அளிப்பார், என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முறைகேடு குறித்த அத்தனை கேள்விகளும் பிசிசிஐ ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா-விடம் திருப்பிவிடப்பட்டது.

நியாயமாகப் பேசவேண்டும் என்றால், பிசிசிஐயின் அதிகார பலத்தை எதிர்கொள்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு எளிதான காரியம் அல்ல. ஆனால் தோனி ஒரு மரியாதைக்குரிய வீரர் என்ற முறையில் குறைந்தபட்சம் சில வார்த்தைகளாவது அதுகுறித்துப் பேசியிருக்கலாம். ஆனால் 2013 மே 28 அன்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிஞ்சியதோ ஏமாற்றம்தான். சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஏதோ மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததுபோல் தோனியும் பாபாவும் நடந்துகொண்டார்கள், அது வெளிப்படையாகத் தெரிந்தது. தோனி அதை கணகச்சிதமாக வேறு செய்தார். “என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”, என்ற வசனம் இதைத்தான் நினைவு படுத்துகிறது.

இன்னும் கதை முடியவில்லை. ஐ.பி.எல். தொடரில் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் முறைகேடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஜஸ்டிஸ் முகுல் முட்கல் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்கமிட்டியின் முன்னால் தோனி தோன்றி, “சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் செயல்பாட்டில் மெய்யப்பனின் தலையீடு எதுவும் இல்லை. ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் ஐ.பி.எல் தொடரில் அவர் சென்னை அணியை ஆதரித்தார், அவ்வளவே”, என்று வாக்குமூலம் அளித்தார்.

ஆனால், பல்வேறு ஆவணங்களையும் வாக்குமூலங்களையும் விசாரித்த குழு, தோனியின் வாக்குமூலத்திற்கு முரணாக, “சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அதிகாரப்பூர்வப் பொறுப்பில் குருநாத் மெய்யப்பன் இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது”, என்று விசாரணையை முடித்தது. மேலும், “சூதாட்டம் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் மெய்யப்பன் ஈடுபட்டதும் உறுதியாகிறது”, என்றது.

பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான ஆதித்யா வெர்மா இதுகுறித்து பிசிசிஐக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வெர்மா சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தோனி  “ஒரு குற்றத்தை மறைத்திரு”ப்பதாகக் குற்றம் சாட்டினார். “ஊழலை மூடி மறைப்பதும் ஊழலில் சேர்த்திதான்”, என்று வாதாடினார்.

2013 பத்திரிகையாளர் சந்திப்போ அல்லது முட்கல் குழுவின் முன் அளித்த வாக்குமூலமோ, ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இந்திய அணியின் கேப்டனான தோனிக்கும், இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவரான தோனிக்கும் இடையே ஏதோ முரண்பாடு இருந்திருக்கிறது.




இது மட்டுமல்ல

தோனி குறித்த மற்றொரு தகவல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரித்தி ஸ்போர்ட்ஸ் என்னும் வீரர்கள் மேலாண்மை நிறுவனத்தில் தோனி வைத்திருந்த பங்குகள் குறித்த தகவல்கள் 2013 சாம்பியஸ் கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வெளியாகின. அந்த நிறுவனம்தான் அப்போது விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரக்ஞான் ஓஜா போன்ற வீரர்களைப் பராமரித்துக்கொண்டிருந்தது. அணியில் யாரையெல்லாம் தேர்வு செய்யலாம் என்று ஒரு கேப்டனாக தோனிக்குப் பங்கு இருக்கும். அணியில் சேர்க்க முடியாத, சரியான ஃபார்மில் இல்லாத வீரர்கள் சிலர் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களைப் பராமரிக்கும் நிறுவனத்தில், அணியின் கேப்டன் பங்கு வைத்திருக்கிறார்; இது தெளிவான முரண்பாடு.

“தோனி சிலகாலம் மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தார்”, என்று ரித்தி ஸ்போர்ட்ஸ் உடனடியாக விளக்கமளித்தது. ஆனால் இவ்விஷயத்தைத் தீர விசாரிக்க வேண்டும் என்று எழுந்த குரல்களை பிசிசிஐ ஏனோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூன் 20 2015-ல் தோனி, ரித்தி ஸ்போர்ட்ஸ் இடையே இருக்கும் விவகாரத்தை பிசிசிஐ-யின் ஒழுங்குமுறைக் குழு விசாரித்து வருகிறது, என்று அப்போதைய பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா சொன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. இது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி என்று அடுத்த நாளே டால்மியா மறுப்பு தெரிவித்தார்.

ரித்தி ஸ்போர்ட்ஸில் தோனி சில காலமே பங்குகளை வைத்திருந்திருக்கலாம். ஆனால் ரித்தி ஸ்போர்ட்ஸ் தலைவர் அருண் பாண்டேவின் பல்வேறு தொழில்களில் தோனிக்கு பங்கு இருக்கிறது, என்றது இந்தியா டுடே. இந்த பாண்டேதான் தோனியின் ஏஜெண்டும் கூட. 2015-ல் கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியில், “தோனியைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவிற்கு வேறு யாருக்கும் தெரியாது”, என்கிறார் அவர்.

தோனி திரைப்படம் ஒரு சரிதை என்றால், ஏன் இவற்றைப் பற்றியெல்லாம் அது பேசவில்லை? ஏது வெறும் தோனி புராணத்தை மட்டும் அது பாடியது? அருண் பாண்டேதான் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். எனவே ஐபிஎல் முறைகேடு குறித்தோ, ரித்தி ஸ்போர்ட்ஸ் விவகாரம் குறித்தோ அத்திரைப்படம் பேசாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


பேட்ஸ்மேனாகப் பரிணமித்த விக்கெட் கீப்பர்

ஒரு முழு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்குள் நுழைய தோனி சிரமப்பட்டார் என்றே சொல்லவேண்டும். ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவே அவர் அணிக்குள் நுழைந்தார். பள்ளி அணியில் விளையாடும்போதுகூட அவர் ஒரு விக்கெட் கீப்பராகவே முன்நிறுத்தப்பட்டார். கால்பந்து ஆடும்போது கோல்கீப்பராக அவர் அசத்தியது அவருடைய பயிற்சியாளருக்கு இவன் நல்ல விக்கெட் கீப்பராக வருவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. தனக்கு கீப்பிங் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் ஆர்வம் உண்டு என்று விரைவிலேயே தோனி தன் பயிற்சியாளரிடம் தெரிவித்தார். பந்தை தோனி தூக்கி அடித்தால் அது மைதானத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டும், என்று ராஞ்சி முழுவதும் மெதுவாக இவர் பெயர் அடிபட ஆரம்பித்தது. தோனி ரன்களாக அடித்துக் குவிக்க, நகரம் முழுவதும் சிறுவர்கள் “தோனி ஆடுகிறான், தோனி ஆடுகிறான்”, என்று கத்திக்கொண்டே ஓடுவார்கள்.

தேர்வுக்குழுவின் கண்காணிப்பில் எத்தனையோ விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் தோனி போன்று தன் இடத்தை உறுதி செய்த வீரர்கள் வேறு யாரும் இல்லை. இப்பொழுது தேசிய தேர்வுக்குழுவின் தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத்தும் ஒரு விக்கெட் கீப்பர்தான். அஜய் ராத்ரா, சாபா கரீம், தீப் தாஸ்குப்தா, சமீர் திகே, விஜய் தஹியா, பார்த்திவ் படேல் என்று எண்ணற்றவர்கள் தோனிக்கு முன் கீப்பர் கிளவுசை அணிந்தார்கள். தினேஷ் கார்த்திக் கூட விக்கெட் கீப்பரானார். லோயர் மிடில் ஆர்டரில் நன்றாக பேட்டிங் செய்யும் ரகத்தில் ஒரு தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு அமையவே அமையாதோ என்கிற அழுத்தம், கடைசியில் வேறு வழியில்லாமல் ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் ஆக்கியது.

ஆனால் டிராவிட் விக்கெட் கீப்பர் ஸ்பெஷலிஸ்ட் கிடையாது. இந்த நெடுநாள் மனக்குறையைத் தீர்ப்பதற்கென்றே வந்ததுபோல் டிசம்பர் 23 2004-ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோனி அறிமுகமானார். அதற்கு முன் கடைசியாக நவம்பர் 13-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார், இனியும் டிராவிட்டுக்கு அந்த சுமை இல்லை. தோனியைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவராக அப்போது இருந்தது இந்தியாவின் தலைசிறந்த கீப்பர்களில் ஒருவரான கிரண் மோரே, என்பது சுவாரசியமான தகவல்.

மேலே குறிப்பிட்ட சில விக்கெட் கீப்பர்கள் தோனியின் கீப்பிங்குக்கு சவால் விடக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்களில் ஒருவர் கூட தோனியின் பேட்டிங்குக்கு முன் நிற்க முடியாது. விக்கெட் கீப்பிங்கிலும் அப்போது தோனி நன்றாக ஆடாமலெல்லாம் இல்லை. அவர் தன்னுடைய டெஸ்ட் ஆட்டத்தை முடித்துக்கொண்டபோது கிரிக்கெட் வரலாற்றில் அதிகமாக அவுட் செய்த விக்கெட் கீப்பர்களில் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.

உலகிலேயே தலைசிறந்த விக்கெட் கீப்பரா தோனி? நிச்சயமாக இல்லை. சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்கு மேலே மார்க் பவுச்சர், ஆடம் கில்கிரிஸ்ட், ஐயான் ஹீலி, ராட்னி மார்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒருநாள் போட்டியில் அதிக அவுட் செய்தவர்களில் தோனி நான்காவதாக இருக்கிறார். அவருக்கு முன்னால் குமார் சங்ககாரா, கில்கிரிஸ்ட் மற்றும் பவுச்சர் ஆகியோரே இருக்கிறார்கள் (இது இக்கட்டுரை எழுதப்பட்டபோது இருந்த புள்ளிவிபரம். தற்போது சங்ககாராவை முந்தி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் தோனி)

90 டெஸ்ட் போட்டிகளில் 294 அவுட் செய்த தோனிக்குப் பிறகு இந்தியர்கள் வேறு யார் டெஸ்ட் மட்டும் ஒருநாள் போட்டியில் அதிக அவுட் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், சையத் கிர்மானி 88 போட்டிகளில் 198 அவுட் செய்திருக்கிறார். 278 ஒருநாள் போட்டிகளில் தோனி 350 அவுட் செய்திருக்கிறார் என்றால் அவருக்கு அடுத்து நயன் மோங்கியா 140 ஒருநாள் போட்டிகளில் 154 அவுட் செய்திருக்கிறார் (அக்டோபர் 2016 புள்ளிவிபரத்தின் படி).

இந்தப் புள்ளிவிபரங்கள் எல்லாவற்றையும் தாண்டி, தோனி 21-ம் நூற்றாண்டு கிரிக்கெட்டின் நவீனத்துவ விக்கெட் கீப்பராக வளர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான, குறி தப்பாத, அதி எச்சரிக்கையான விக்கெட் கீப்பரைக் கிரிக்கெட் உலகம் இதுவரை பார்த்ததில்லை. ரன் அவுட் செய்ய வேண்டும் என்றால் பந்தை கிளவுசில் பிடிக்காமல் அதை ஸ்டம்பை நோக்கி அனாயசமாகத் தட்டிவிடுகிறார். ஸ்டம்பிங் செய்யும்போது கண்ணை மூடிக்கொண்டு  வேகமாக பெயில்ஸை அடிக்காமல், பேட்ஸ்மேனின் பாதங்கள் தரையைவிட்டு எழும்பும்வரை காத்திருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று அவுட்டாக்குகிறார்.

பரபரப்பான இறுதிக்கட்டங்களில் தன் கிளவுசைக் கழட்டிவிடுகிறார். ஒருவேளை பேட்ஸ்மேன் பந்தைத் தவற விட்டுவிட்டால் குறி பார்த்து ரன் அவுட் செய்யலாம் அல்லவா? அப்பொழுதும் பந்தை ஸ்டம்ப் நோக்கி எறியாமல் தன் ஓடும் திறனை நம்பி தடதடவென ஸ்டம்ப் நோக்கி ஓடுகிறார். இந்த கணத்தில் பேட்ஸ்மேனைவிட தன்னால் வேகமாக ஓடி ஸ்டம்பை அடைய முடியுமா, என்று கச்சிதமாகக் கணக்கு போட்டு ஓடலாமா எறியலாமா என்று முடிவெடுக்கிறார்.




ஆபத்தான பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பராக அவர் அசத்தினாலும் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது அவருடைய பேட்டிங்தான். இந்தப் பந்து மைதானத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று தோனி நினைத்தால், அது போயே தீரும் என்ற அளவிற்குப் பந்துவீச்சாளருக்குக் கிலியை ஏற்படுத்துவார். இந்த மந்திர சக்திக்குத் தன்னுடைய பள்ளிக் காலங்களிலிருந்தே அவர் பிரபலம்.

அப்போதுதான் அறிமுகமாகியிருந்த வேளையில், விசாகப்பட்டினத்தில் தன்னுடைய ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் அவர் விளாசிய 148 ரன்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. ஜெய்பூரில் தன்னுடைய 22-வது போட்டியில் இலங்கைக்கு எதிராக 145 பந்துகளில் அவுட்டாகாமல 183 ரன்களை வாரிக்குவித்தார். இதில் கவனிக்க வேண்டியது, இந்தியா இலங்கையின் 299 ரன்களைத் துரத்த வேண்டியிருந்தது. இன்றைக்கு அது சுலபமான ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் 2005-ல் இதைத் துரத்துவது என்பது எந்த அணிக்கும் பெரும் சாதனை.

ஜெய்பூரில் விளாசிய 183 ரன்களுக்குப் பிறகு தோனிக்கு ஒரே ஏறுமுகம்தான். ஒருநாள் போட்டியில் தோனியைப் போல் ஆட்டத்தை முடிக்கும் ஒரு வீரர் இதற்கு முன் தோன்றியதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக இந்தியாவிற்கு வெற்றிகளைத் தேடித் தந்தார். டாப் ஆர்டர் மளமளவென்று சரிந்துவிட்டால் தோனி களமிறங்கி ஆட்டத்தை நிலைப்படுத்துவார். கரணம் தப்பினால் மரணம் என்று இறுதி ஓவர்களில் இவரிடம் மட்டையைக் கொடுத்தால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அணியை வெற்றிக்கோட்டிற்கு இட்டுச்செல்வார்.

யுவராஜ் சிங்குடனும், பின்னர் சுரேஷ் ரெய்னாவுடனும் இணைந்து தோனி ஒருநாள் போட்டிகளில் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக செயல்பட்டார். பந்துவீச்சாளர்களிடமிருந்து வெற்றியைப் பறித்து, அவர்களை சோர்வுற வைத்து, போட்டியைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் ஃபினிஷிங் கலாசாரத்தைத் துவக்கி வைத்தவர் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன். தோனி மிக விரைவிலேயே அந்த மைக்கேல் பெவனுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றார்.

1994 துவங்கி 2004 வரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பெவன், தோனியைப் போல் மூர்க்கத்தனமான ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் அவர் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். டாப் ஆர்டர் சரிந்துவிட்டால் இவரை நம்பி போட்டியை ஒப்படைக்கலாம். இவருடைய இருப்பு ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பலத்தைக் கூட்டியது. சொல்லப்போனால் பல போட்டிகளில் ஆஸ்திரேலியாவைக் கரை சேர்த்தவர் இவர்தான்.

பெவனின் ஒட்டுமொத்த பேட்டிங் சராசரியை விட (53.58), ரன்களைத் துரத்துகையில் அவரது சராசரி அதிகம் (56.50). தோனியின் ஒட்டுமொத்த சராசரியும் (51.25), இரண்டாம் இன்னிங்ஸ் சராசரியும் (51.07) கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் ஆட்டத்தை முடித்துக்கொடுப்பது என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு; வெறும் சராசரியை நம்பி அது தீர்மானிக்கப்படுவது அல்ல. அன்றைய தினத்தில், களத்தில் என்ன நடக்கிறது என்பதே அதில் முக்கியம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கு அதிக சராசரி இருக்கலாம், ஆனால் ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் சாத்தியக்கூறு ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை விட அவருக்குக் குறைவு. அந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் சராசரி எத்தகையதாக இருந்தாலும், ஆட்டத்தை அவர் காப்பாற்றும் வாய்ப்பு எப்படியும் இருக்கத்தான் செய்யும்.

40-க்கும் அதிகமான போட்டிகளில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இடங்களில் களமிறங்கிய வீரர்கள் மொத்தமே 48 தான். அவர்களுள் பெவன் அதிக சராசரியுடன் (49.97) முதலிடத்திலும், தோனி இரண்டாம் இடத்திலும் (47.24) இருக்கிறார்கள். எத்தனை ரன்கள் குவித்துள்ளனர் என்று பார்த்தால் அதில் பெவன் பத்தாவது இடத்திற்கு சரிந்துள்ளார். 124 போட்டிகளில் 3,200 ரன்கள் எடுத்து இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா முதலிடத்தில் இருக்க, தோனி அவருக்கு மிக மிக அருகில் 101 போட்டிகளில் 3,017 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார் (அக்டோபர் 2016 புள்ளிவிபரத்தின் படி).

இந்தப் பட்டியலை இன்னும் சுருக்கி, 50-க்கும் அதிகமான போட்டிகளில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இடங்களில் களமிறங்கிய வீரர்கள் என்று கணக்கெடுத்தால் இப்போது மொத்தம் 30 பேர்தான் தேறுகிறார்கள். தலைசிறந்த ஃபினிஷர்களை இந்தப் பட்டியலிலிருந்து சுலபமாக அடையாளம் காண முடியும். ஆனால் இந்தப் பட்டியலில் 49.97 சராசரி வைத்திருக்கும் பெவனிலிருந்து 21.03 சராசரி வைத்திருக்கும் அஃப்ரிதி வரை இருக்கிறார்கள். ஒரு ஃபினிஷர் ஆட்டத்தை முடிக்கிறாரா இல்லையா என்பதை ‘எத்தனை நாட் அவுட்’ என்று கணக்கிடுவதன் மூலம் கிட்டத்தட்ட துல்லியமாக அறிந்துகொள்ளலாம். அதன் அடிப்படையில் பார்த்தால் இந்தப் பட்டியலில் தோனி (36) முதல் கெய்ரான் பொல்லார்ட் (5) வரை இருக்கிறார்கள்.

இவர்களில் தோனி எவ்வாறு ஒரு தலைசிறந்த ஃபினிஷர் என்று நாம் கொள்ள முடியும்? வழி இருக்கிறது. ஃபினிஷர்கள் என்பவர்கள் போட்டியை வென்று கொடுக்க சில மாயாஜாலங்களை நிகழ்த்த வேண்டியிருக்கும். 25 போட்டிகளுக்கும் அதிகமாக ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது இடங்களில் களமிறங்கி, போட்டியையும் வென்று கொடுத்தவர்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில்தான் தோனியின் சாதனை தெளிவாக வெளிப்படுகிறது. மொத்தம் தேறும் 25 வீரர்களின் சராசரியை ஒப்பிட்டால், தோனியின் சராசரி இமாலய அளவில் உயர்ந்து நிற்கிறது (98.93). பெவன் மெச்சத்தகுந்த சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் (73.50).

அப்படிப்பட்ட 50 போட்டிகளில் தோனி 34 போட்டிகளில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்திருக்கிறார். பெவன் 25 வெற்றிப் போட்டிகளில் 13 முறை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார். இந்தப் பட்டியல் என்பது மிகவும் தலைசிறந்த ஃபினிஷர்களை அடையாளம் கண்டுகொடுக்கும் என்பதால், அப்பட்டியலை இங்கு மொத்தமாகத் தருவதே நியாயமாகும். அப்பட்டியலில் தோனியைத் தவிர்த்து இந்தியாவின் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் கபில் தேவ் ஆகியோர் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பெவனைத் தவிர்த்து ஆண்டிரூ சைமண்ட்சும் ஸ்டீவ் வாக்கும் இருக்கிறார்கள். பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக், சோயப் மாலிக், சலீம் மாலிக், ஷாகித் அஃப்ரிதி இருக்கிறார்கள். இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவின் ஹான்சி க்ரோன்ஜே, ஜான்டி ரோட்ஸ், ஜே.பி.டுமினி மற்றும் மார்க் பவுச்சர் இருக்கிறார்கள். மேற்கிந்தியத் தீவுகளின் ஜெஃப் டுஜான், கஸ் லோகி, கார்ல் ஹூப்பர் மற்றும் டுவைன் பிராவோ இருக்கிறார்கள். நியூசிலாந்தின் க்ரெய்க் மேக்மில்லன் மற்றும் கிறிஸ் கெயிர்ன்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இங்கிலாந்தின் இயான் மார்கனும், வங்கதேசத்தின் ஷகிப்-அல்-ஹசனும் இப்பட்டியலில் இருக்கிறார்கள்.

பெவன் ஆடிய காலகட்டமும் தோனி ஆடிய காலகட்டமும் வெவ்வேறு என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். வெவ்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டும், வெவ்வேறு பந்துவீச்சு சவால்களை எதிர்கொண்டும் தங்களின் கிரிக்கெட்டை இவ்விருவரும் அமைத்துக்கொண்டனர். பெவன் ஓய்வு பெற்று பத்து மாதங்களுக்குப் பிறகே தோனியின் ஆட்டம் துவங்குகிறது. ஆனால் ஒன்றை நிச்சயமாக சொல்ல முடியும். தலைசிறந்த ஃபினிஷர் என்று சொல்ல முடியாவிட்டாலும், தலைசிறந்த ஃபினிஷர்களில் தோனி குறிப்பிடத்தகுந்தவர் என்று கண்டிப்பாக சொல்ல முடியும். மைக்கேல் பெவனே அவ்வாறு கூறியிருக்கிறார்.

Photo: Hindustan Times

உலகக் கோப்பை நோக்கி இந்தியா

தன் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நியூ யார்க் வந்திருந்த தோனி, 2007 உலகக் கோப்பை தோல்விக்கு பின் இருக்கும் கதையைப் பகிர்ந்துகொண்டார். ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்தபோது கங்குலியின் தலைமையில் இந்தியா 2003 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்றது. அதனால் டிராவிட்டின் தலைமையில் 2007 உலகக்கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் அழுத்தம் கூடியிருந்தது. அப்பொழுது க்ரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தார்.

அந்த உலகக்கோப்பை இந்தியாவிற்குப் பேரிடியாக அமைந்தது. இலங்கையிடமும் வங்கதேசத்துடனும் தோற்றுப் போய் க்ரூப் நிலையிலேயே அவமானத்துடன் வெளியேறியது இந்தியா. இந்தியா அந்த உலகக்கோப்பையில் பெற்ற ஒரே வெற்றி, பெர்முடாவுக்கு எதிராக.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. வென்றால் கிரிக்கெட் வீரர்களைக் கடவுளர்களாக வழிபடுவார்கள். தோற்றால் வீட்டில் கல்லெடுத்து அடிப்பார்கள். 2007 உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு, இரண்டாவதாக சொன்னதுதான் நடந்தது.

தோனியின் வீட்டில் ரசிகர்கள் கல்லெடுத்து எறிந்தார்கள். தோனி சொல்கிறார், “அப்பொழுது தில்லியில் நாங்கள் தரையிறங்கியதும், நேராக ஒரு போலீஸ் வேனில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியேறினோம். நான் வீருவின் (சேவாக்) அருகே உட்கார்ந்துகொண்டிருந்தேன். மாலையோ இரவு நேரமோ இருக்கும். இந்தியாவின் குறுகிய சந்துகளில் 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வண்டி சென்றுகொண்டிருந்தது. எங்களைச் சுற்றி மீடியா வண்டிகள், விளக்குகளைப் போட்டுக்கொண்டு கேமராக்களை உயர்த்திப் பிடித்தபடி எங்களைத் துரத்திக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாங்கள் பெரிய குற்றம் செய்துவிட்டோமோ, கொலைகாரர்களோ, தீவிரவாதிகளோ நாங்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து நேராக ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்தோம். ஒரு கால் மணி நேரம் அங்கு உட்கார்ந்துவிட்டு, பிறகு தத்தமது கார்களில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அந்த சம்பவம் எனக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. அந்த அதிர்வுகள் கொடுத்த உணர்ச்சிக் கொந்தளிப்பை நான் சரியான திசையில் செலுத்தினேன். ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும் நல்ல மனிதராகவும் ஆக அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்.”

2007 கொடுத்த தோல்வியை தோனி மிக விரைவிலேயே மறக்கடிக்க வைத்தார். முதல் T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து சீனியர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தூக்கப்பட, கேப்டனாக தோனி தேவு செய்யப்பட்டார். பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்ததும் கேரவன் இதழ் இவ்வாறு எழுதியது: “இதோ மைதானத்தில் இருக்கும் கண்ணியமான சிகைகளுக்கு மத்தியில், செம்பு நிறத்தில் சிலிர்க்கும் நீளமான முடியுடன் தனித்துத் தெரிகிறாரே, அவர்தான் இந்திய அணியின் கேப்டன்.”. அதன் பின் மிக விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார்.


தோனி முதல் வேலையாக 2011 உலகக் கோப்பையைக் குறிவைத்தார். 2007 தோல்விக்கு மற்ற அணிகளைப் பழி வாங்கியே ஆக வேண்டும். அதன் ஆயத்தப் பணியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன் பேங்க் ஆஸ்திரேலியா-இலங்கை-இந்தியா முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக அணியிலிருந்து சில சீனியர் வீரர்கள் கழட்டிவிடப்பட்டனர். திரைப்படத்தைப் பார்த்து அந்த சீனியர் வீரர்கள் யார் என்று ஓரளவுக்கு ஊகிக்கலாம், ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. ஏனெனில் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கடைசியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏற்கனவேயே ஒரு வருடம் கடந்திருந்தது. இந்தியாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலேயே டிராவிட் கழட்டிவிடப்பட்டிருந்தார். திரைப்படத்தில் ஃபீல்டிங் ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் கங்குலியைக் கழட்டிவிட்டதற்கு வெறும் ஃபீல்டிங் மட்டும் காரணமாக இருக்க முடியாது.

அப்பொழுது இந்திய அணி ஏற்கனவேயே நான்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தது. கங்குலி, சச்சின், சேவாக், கம்பீர் என்று நால்வர் இருந்தார்கள். கங்குலியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஃபார்ம் ஏற்கனவேயே குறைந்திருந்தது. அவரைப் போன்ற சீனியர் ஒருவரை அணியில் எடுத்துவிட்டு பெஞ்சில் உட்கார வைப்பது என்பது தோனிக்குக் கடினமான ஒன்று. மேலும் டிராவிடைப் போல் சச்சினும் அப்போது துடிப்பான ஃபீல்டராக இல்லை, ஆனால் நம்பிக்கைக்குரிய ஃபீல்டராக இருந்தார்.

சீனியர் வீரர்களைக் கழட்டிவிட்டு, ஆனால் சச்சினை மட்டும் அணியில் சேர்த்துக்கொண்டது தோனிக்கு சாதகமான விளைவுகளைத் தந்தது. தோனி நினைத்திருந்தாலும் சச்சினைக் கழட்டிவிட்டிருக்க முடியாது, அது வேறு விஷயம். நடந்த மூன்று இறுதிப்போட்டிகளில் பிரிஸ்பேனிலும் சிட்னியிலும் சதமடித்து இந்தியாவிற்குக் கோப்பை தேடித்தந்தார் சச்சின். சில இக்கட்டான கேள்விகளிலிருந்து தோனி இதனால் தப்பினார்.


அற்புதமான கேப்டன்

இந்திய அணியின் கேப்டனாக அபார துவக்கத்தைத் தந்திருந்தார் தோனி. 2008-ல் அனில் கும்ப்ளே ஓய்வு பெற, தோனி டெஸ்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அடுத்த ஒரே வருடத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்தது. அதன்பிறகு நம் அனைவருக்கும் நெருக்கமான அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் ஒரு தலைமுறையாக ஏங்கும் அந்தப் பெருங்கனவை தோனியின் அணி நனவாக்கியது. 28 ஆண்டுகள் கழித்து 2011-ல் இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

Photo: NDTV

ஒருநாள் உலகக் கோப்பை, T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் முதலிடம் - இந்த நான்கையும் தன் அணிக்குப் பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனிதான். இச்சாதனையில் உலகின் வேறெந்த கேப்டனும் தோனிக்கு அருகேகூட வரமாட்டார்கள்.

60 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் தலைமை தாங்கிய தோனிதான் இன்றைக்கு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டன். 25 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமாகத் தலைமை தாங்கிய இந்தியக் கேப்டன்களில் தோனி வெற்றி:தோல்வி விகிதத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் (1.5). கங்குலி முதலிடத்திலும் (1.61), டிராவிட் மூன்றாம் இடத்திலும் (1.33) இருக்கிறார்கள்.

50 ஒருநாள் போட்டிகளுக்கும் அதிகமாகத் தலைமை தாங்கி வென்ற இந்தியக் கேப்டன்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், தோனிதான் முதலிடத்தில் இருக்கிறார் (59.56%). அவருக்குப் பின் டிராவிட் (56%), அசாருதீன் மற்றும் கபில் தேவ் (54.16%), மற்றும் கங்குலி (53.90%) ஆகியோர் இருக்கிறார்கள் (அக்டோபர் 2016 புள்ளிவிபரம்).

ஆனால் தோனியின் டெஸ்ட் தலைமை விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக வெளிநாட்டுத் தொடர்களில் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து சொதப்பியது. எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கும்போது முடிவுகளை மாற்றாமல் இருக்கிறார், மாற்று முடிவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை, என்று கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த கட்டங்களில் கைகொடுக்க தோனியிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், எதிரணியினர் ரன்களைக் குவிக்கிறார்கள் என்னும்போது ஃபீல்டிங் அமைப்பை தற்காப்பு மிக்க ஒன்றாக மாற்றாமல் அப்படியே வைத்திருந்தார் தோனி. மேலும் ஒரு திட்டம் தோல்வியுற்றால் கைவசம் வேறெந்த திட்டமும் இல்லாதவராகவே தோனியின் கள செயல்பாடுகள் இருந்தன.

2011 உலகக் கோப்பை வென்ற பெருமிதத்துடன் மிதந்த இந்தியா, அதன்பிறகு டெஸ்ட் தொடர்களில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து சென்று 0-4 என்று அடிவாங்கிய டெஸ்ட் அணி, ஆஸ்திரேலியா சென்று அங்கும் 0-4 என்று மொத்தமாக விழுந்தது.

ஆனால் இதே காலகட்டத்தில் மற்ற அணிகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 2013-ல் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது 0-4 என்று மண்ணைக் கவ்வியது. ஆஸ்திரேலியா சென்ற இலங்கை 0-3 என்று ரணப்பட்டு நாடு திரும்பியது. அதற்கான பழிவாங்கலாக 2016-ல் ஆஸ்திரேலியாவை இலங்கைக்கு அழைத்து 0-3 என்று அடித்து அனுப்பியது. 2013-ல் பாகிஸ்தானை 3-0 என்று துவைத்து எடுத்தது தென் ஆப்பிரிக்கா. 2013-ல் இங்கிலாந்தை 5-0 என்று மொத்தமாக சிறப்பு செய்து திருப்பியனுப்பியது ஆஸ்திரேலியா. இதன் பின்னணியில் கேரவன் இதழ் தோனிக்காக இவ்வாறு பரிந்து பேசுகிறது. “தோனி விளையாடிய அந்த பத்தாண்டுகளில் தென் ஆப்பிரிக்கா தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் மிக மோசமாகவே விளையாடின.”

ஆனால் 2011 மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடர் வரை கூட தோனி வெற்றி:தோல்வி விகிதத்தை அதிகமாகவே வைத்திருந்தார் (5). அதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் தலைமையேற்றிருந்த தோனி, வெளிநாட்டில் 12 போட்டிகளில் தலைமை தாங்கினார். அவற்றில் இந்தியா ஐந்தில் வென்று இரண்டில் தோற்றது. இது ஒன்றும் மோசமான போக்கு இல்லை. ஆனால் அத்தொடருக்குப் பின்னால் தோனியின் வெற்றி:தோல்வி விகிதம் மளமளவென்று சரிந்து இறுதியில் 1.5 என்று நின்றது. இந்த இறங்குமுகம் ஜூலை 21 2011-ல் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி, டிசம்பர் 30 2014-ல் மெல்போர்னில் முடிந்தது. அதுதான் தோனியின் இறுதி டெஸ்ட் போட்டியும் கூட.

இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே வெளிநாட்டில் மோசமாகவே விளையாடின. ஆஸ்திரேலியா ஆறில் வென்று ஒன்பதில் தோற்றது. இங்கிலாந்து மூன்றில் வென்று ஏழில் தோற்றது. பாகிஸ்தான் நான்கில் வென்று ஏழில் தோற்றது. இலங்கை மூன்றில் வென்று ஆறில் தோற்றது. நியூசிலாந்து மூன்றில் வென்று பதினொன்றில் தோற்றது. மேற்கிந்தியத் தீவுகள் மூன்றில் வென்று ஒன்பதில் தோற்றது. ஆனால் தோனியின் இந்தியா இவையெல்லாவற்றையும் விட மோசமாக விளையாடியது. பதிமூன்றில் தோற்று ஆறுதலுக்காக ஒன்றே ஒன்றை லார்ட்ஸ் மைதானத்தில் வென்றது.

ஆனாலும் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளது. எப்படியென்றால், அதே காலகட்டத்தில் உள்நாட்டில் இந்திய அணி வெல்ல முடியாத பெரும் சக்தியாக விளங்கியது. 30 போட்டிகளில் விளையாடிய இந்தியா 21 போட்டிகளில் வென்று, வெறும் மூன்றில்தான் தோற்றது. மற்ற இந்தியக் கேப்டன்களோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால் தோனி பெரும் உயரத்தில் இருக்கிறார். கங்குலியின் இந்தியா பத்தில் வென்று மூன்றில் தோற்றது. அசாருதீன் இருந்தபோது 13 போட்டிகளில் வென்று நான்கில் இந்தியா தோற்றது. டிராவிட் தலைமையில் மூன்றில் வென்று இரண்டில் தோற்றது.

இதே வெளிநாட்டுப் போட்டிகளில் கதை வேறு. தோனியின் இந்தியா ஆறில் வென்று 15 போட்டிகளில் தோற்றது. அசாருதீன் தலைமையில் ஒன்றே ஒன்றில் வென்று பத்தில் தோற்றது. டிராவிட் இருந்தபோது ஐந்தில் வென்று நான்கில் தோற்றது. கங்குலியின் அணிதான் இவற்றுள் சிறந்தது; 11 போட்டிகளில் வென்று 10 போட்டிகளில் தோற்றது.


Photo: Hindustan Times

அடித்து ஆடினாரா தோனி?

தோனியின் டெஸ்ட் பேட்டிங் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. 90 டெஸ்ட் போட்டிகளில் தோராயமாக 5,000 ரன்கள் எடுத்திருக்கிறார். 38.09 என்பது ஒரு நடுவாந்திரமான சராசரி, அவ்வளவே.

ஒருநாள் போட்டியில் அவருடைய அபார ஆட்டத்தைப் பற்றி முன்பே பார்த்தோம். அதேபோல் T20 போட்டிகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். T20 என்பது சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனால் எதைக் கொண்டு நல்ல ஆட்டத்தை அளவிடுவது என்று இன்னும் தெளிவான வழிமுறைகள் உருவாகவில்லை. மேலும் T20 போன்ற குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கும் தோனி போன்ற வீரர்களுக்கு சாதனை எதுவும் புரிய பெரிதாக வாய்ப்பும் இல்லை. ரன்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்ற காரணிகளை இணைத்து ஒரு புதிய குறியீட்டை ஐசிசி அறிமுகப்படுத்தினால் அதன் மூலம் வீரர்களின் T20 ஆட்டத்தை இன்னும் சரியாக மதிப்பிடலாம்.

ஒரு தகவல்: ஒருநாள் போட்டியில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மைக்கேல் பெவனைவிட அதிகம், ஆனால் 1994-04 வரை விளையாடிய ஒரு வீரரின் ஸ்ட்ரைக் ரேட்டையும் 2004-ல்தான் விளையாடவே ஆரம்பித்த ஒரு வீரரின் ஸ்ட்ரைக் ரேட்டையும் ஒப்பிடுவது வீண் வேலை.

இருபது T20 போட்டிகளுக்கும் அதிகமாக விளையாடியவர்களின் சராசரி என்றொரு பட்டியலைத் தயாரித்தால் தோனி அதில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் (37.52). விராத் கோலி 57.13 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். T20 போட்டிகளில் மொத்த ரன்கள் என்று பார்த்தால் தோனி அதில் 28-வது இடத்தில் இருக்கிறார். பிரண்டன் மெக்கலத்திற்கு முதலிடம். ஸ்ட்ரைக் ரேட் என்று பார்த்தால் தோனி எங்கோ பின்னால் இருக்கிறார். T20 போட்டிகளில் அவரின் அதிகபட்ச ரன்னே 48 தான். லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் தோனியால் மெக்கலம் போன்றோ, கிறிஸ் கெயில் போன்றோ T20 ஆட்டத்தில் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால் தோனியின் கீர்த்தி பெரிது. அப்படித்தான் 2008-ல் முதல் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு அவர் ஏலம் போனார்.

ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் தோனி என்றதும் நினைவிற்கு வரும் மற்றொன்று அவருடைய கடைசி ஓவர் ஹீரோயிசம். ஆனால் அதுவும் வர வர நம்பகத்தன்மையற்ற ஒன்றாக ஆகி வருகிறது. ஆகஸ்ட் 27 2016-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்தன. ஒரு T20 போட்டியில் இதெல்லாம் எளிய காரியம், மேலும் அங்கு நிற்பதோ தோனி. எனவே போட்டியின் முடிவு என்னவென்று தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அனைவருமே நினைத்தார்கள்.

ஆனால் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றுப் போனது. சிறந்த ஃபினிஷர் என்று புகழப்படும் தோனி, போட்டியைக் கடைசி நிமிடம் வரை இழுக்கிறார், அதனால் சமயங்களில் போட்டியின் முடிவு அவர் கையை மீறிச் செல்கிறது.

பிஷன் ஜஸ்வந்த் ஒரு பழைய, ஆனாலும் சுவையான வாதத்தை முன்வைக்கிறார். இறுதி ஓவர்களில் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தோனியின் திறன் சற்றே அதீதமாக ஏற்றிச்சொல்லப்படுகிறது என்பதே அது. ஆனாலும் ஐபிஎல் தொடர்களில் இத்திறனை தோனி நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பிறகு ஏன் இத்திறன் சர்வதேசப் போட்டிகளிலும் அதே அளவு எதிரொலிக்கவில்லை? ஜஸ்வந்திடம் ஒரு பதில் இருக்கிறது, “பொதுவாக சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சு ஐபிஎல் போட்டிகளின் பந்துவீச்சை விட உயர்தரத்தில் இருக்கின்றன. மேலும் சூழலும் சவாலானதாக இருக்கின்றன.”


தோனியின் வளர்ச்சி

ரயில்வே அதிகாரி ஒருவர் நீ ஆங்கிலத்தில் இன்னும் சரியாகப் பேச வேண்டும் என்று தோனியிடம் சொல்வதுபோல் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இந்தியா ஏ அணியில் இருந்தபோது கூட தோனி பேசும் ஆங்கிலம் சற்று உடைந்தே இருக்கும். இன்று நீங்கள் ஏதேனும் ஒரு போட்டியை எடுத்துக்கொண்டு அதன் பரிசளிப்பு விழாவைப் பாருங்கள். சிரமம் ஏதுமின்றி மிக சரளமாக தோனி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார். மேலும் மற்றவர்களின் பதில்களை விட தோனியின் பதில் நீண்டதாகவும் விரிவாகவும் இருக்கும்.

கேரவன் இதழுக்காகப் பேட்டி கொடுத்த கரக்பூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளரான ஆஷிஷ் தல், “மழைக்காலங்களில் தோனி ஒரு கால்பந்தை எடுத்துக்கொண்டு மைதானத்தில் தன்னந்தனியாக ஓடுவான். அவனுடைய மூச்சுத் திறனும், தொடை பலமும் அதிகரிக்க அவன் செய்யும் பயிற்சி அது”, என்று தோனியின் சிறுவயதை நினைவுகூர்கிறார். அப்பயிற்சி நிச்சயமாக தோனிக்கு உதவியிருக்கிறது என்பதை அவர் பந்தைத் தட்டிவிட்டு ஓடும் ஓட்டத்தை வைத்தே சொல்லலாம். விரைவாக ஓடி ரன்களை குவிக்கும் வீரர்கள் இந்திய அணியில் இருந்ததே இல்லை. தோனி வந்தபிறகுதான் அந்த நிலை மாறியது. தற்போது இந்திய அணியில் அப்படிப்பட்ட ஓட்டக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் தோனியும் கோலியும்தான் இருப்பதிலேயே அதிக வேகமானவர்கள். அவருடைய பால்ய கால பயிற்சிகள் நிச்சயமாக அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக ஆக உதவியிருக்கிறது.

பிப்ரவரி 21 2016 அன்று தோனி ஒரு ட்வீட்டை வெளியிட்டார்: “கருத்துச் சுதந்திரம் குறித்து நாம் விவாதித்து வரும் இவ்வேளையில், நம் ராணுவம் நம்மைக் காத்தபடி நாம் அவ்வாறு விவாதிக்கும் சூழலை உறுதி செய்தபடி இருக்கிறது”. அதனைத் தொடர்ந்து மற்றொரு ட்வீட் வந்தது: “கமாண்டோ வீரர்கள் உங்களைப் போன்றும் என்னைப் போன்றும் சாதாரண மனிதர்கள்தான். நம்மைப் போலவே நாட்டின்மீது உத்வேகமும் பற்றும் கொண்டு தேசத்தின் நலன்களை சுய நலன்களின் பின்னால் வைப்பவர்கள் அவர்கள்”. இந்திய ராணுவத்தில் தோனிக்கு கவுரவ லெஃப்டினன்ட் கர்ணல் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், அந்த ட்வீட்டுகள் வந்தது வேறொரு பின்னணியில். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக உச்சநீதிமன்றத்தால் அஃப்சல் குருவுக்கும் மக்பூல் பட்டுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அம்மரண தண்டனையை எதிர்த்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை தில்லி காவல்துறை கலைத்து கன்னையா குமார் உள்ளிட்ட சில மாணவர்களைக் கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் ஊடகங்களில் எழ ஆரம்பித்தன. பல்வேறு விவாதங்களில் போராட்டக்காரர்கள் அஃப்சல் குரு, மக்பூல் பட் போன்ற தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காக்கும் ராணுவ வீரர்களுக்கு எதிராகக் கருத்துரைத்தனர். இதன் பின்னணியில் தோனியின் ட்வீட்டுகள் வந்தன.

“ஒரு இந்திய வர்ணனையாளர் மற்ற வீரர்களை விட இந்திய வீரர்களைப் பற்றியே அதிகம் பேசுவதுதான் சிறந்த பண்பாக இருக்க முடியும், என்பதை மரியாதையுடன் சொல்லிக்கொள்கிறேன்”, என்று மார்ச் 24 2016 அன்று அமிதாப் பச்சன் வெளியிட்ட ட்வீட் ஒன்றை தோனி, “இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை”, என்று தன் பக்கத்திலும் ரீட்வீட் செய்தார். இந்த ட்வீட்டின் காரணமாகத்தான் ஹர்ஷா போக்லே ஒன்பதாவது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக சேர்த்துக்கொள்ளப்படவில்லை, என்று ஒரு கருத்து வலம் வந்தது.

2013 பத்திரிகையாளர் சந்திப்பில் கடினமான கேள்விகளுக்கு தோனி பதில் சொல்லவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தோனி சிலவற்றிற்குத் தன் கருத்தைப் பதிவு செய்துதான் வருகிறார். கருத்து சுதந்திரம் குறித்து அவருக்கு ஒரு கருத்து இருக்கிறது, அந்த சுதந்திரத்தை யார் காக்கிறார்கள் என்றும் அவரிடம் தெளிவானதொரு பதில் இருக்கிறது. ஒரு இந்திய வர்ணனையாளர் இந்தியா பங்கேற்கும் போட்டிகளில் எவ்வாறு வர்ணனை செய்யவேண்டும் என்றும் அவரிடம் ஒரு கருத்து இருக்கிறது.

2016-ல் ஆறாவது T20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியிடம் இந்தியா தோற்று வெளியேறியது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. முப்பதுகளில் இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரிடம் அனைவரும் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான். “ஓய்வு பெற இதுதான் சரியான சமயமோ?”

தோனி உடனடியாக அந்த வெளிநாட்டு நிருபரை அழைத்து அருகே உட்கார வைத்துக்கொண்டார். விக்கெட்டுகளுக்கு இடையே தான் ஓடும் வேகத்தைக் குறிப்பிட்டு, “என் உடற்தகுதி போதுமானதாக இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?”, என்று கேட்டார். மேலும் அந்த பாவப்பட்ட நிருபரிடம், “நான் 2019 உலகக் கோப்பை வரை களத்தில் நிற்பேன் என்று நினைக்கிறீர்களா?”, என்று அடுத்த கேள்வியை வீசினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நட்டநடுவில் உட்கார வைக்கப்பட்டு, பிரபலமான இந்தியக் கேப்டன் ஒருவர் எதிர் கேள்வி கேட்பது அவருக்குப் பெரும் சங்கடமாக இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் தளர்ந்த நிலையில் தோனியின் உடற்தகுதியை அவர் ஒப்புக்கொண்டார்.

நிச்சயமாக தோனியால் 2019 உலகக் கோப்பை வரை விளையாட முடியலாம். ஆனால் தோனி ஒரு நிருபரைப் பதட்டப்படவைத்து, கைப்பாவை ஆக்கி, அவரின் வாயால் அதை சொல்ல வைத்தார். அதோடு அவர் நிற்கவில்லை. இக்கேள்வியைக் கேட்ட நிருபர் இந்திய ஊடகத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்றார். ஏனென்றால் அந்த இந்திய நிருபருக்கு ஒரு சகோதரனோ மகனோ இருந்து, அவரால் தனக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் ஆக முடியுமா என்று தோனியால் கேட்டிருக்க முடியும்.


சீனிவாசனின் அமைதியை தோனி அந்த 2013 பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதிபலித்து மூன்று ஆண்டுகள் கூட ஆகவில்லை. அந்த சந்திப்பில் அவர் அதீத நுட்பத்துடன் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார். தோனியின் சுயதம்பட்டம் புதிதல்ல, ஆனால் அந்த நுட்பம் மிகவும் புதிது.

ஒரு சோடா விளம்பரத்தில் தோனி 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நினைவு கூர்கிறார். சாதாரண போட்டியிலேயே 275 ரன்களைத் துரத்த வேண்டும் என்றால் அழுத்தம் இருக்கும். உலக்கோப்பை இறுதிப்போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். 114 ரன்கள் இருக்கும்போது இந்தியா தன் மூன்றாவது விக்கெட்டை இழந்து, ரவி சாஸ்திரியின் வர்ணனைப்படி “இக்கட்டான சூழலில் நிற்கிறது”. தோனி திரைப்படத்தின் துவக்கத்தில் இப்போட்டியின் காட்சி வரும்போது மூன்றாவது விக்கெட்டிற்குப் பின் தோனி களமிறங்க முடிவு செய்வார். “ஆனால் யுவராஜ் சிங் கிளவுஸ் அணிந்து தயாராகி விட்டாரே”, என்று பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் எச்சரித்தும், தோனி தன் முடிவில் உறுதியாக இருந்து நான்காவது விக்கெட்டிற்கு யுவராஜ் சிங்கிற்கு பதில் களமிறங்குவார். இதுதான் பின்னணி.
விளம்பரத்தில் தன்னுடைய இந்த முடிவைத் தானே மெச்சிக்கொள்கிறார் தோனி. “ஒரு கிரிக்கெட் நிபுணராக இருந்தால் இந்த தருணத்தில் நல்ல ஃபார்மில் உள்ள ஒரு வீரரைக் களமிறக்கியிருப்பார் (யுவராஜ்தான் தொடர் நாயகன்). ஆனால் எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன. ஏனெறால், நாம் வெற்றி பெற வேண்டுமெனில் வித்தியாசமாக சிந்திக்கவேண்டும்”. தோனியின் முடிவு சரியானதாகவே அமைந்தது, அதனால்தான் அந்த விளம்பரத்தில் அவ்வசனம் சேர்க்கப்பட்டது. அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தோனிக்கே கிடைத்தது.

தோனி அப்போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதே அளவு திறமையான ஆட்டத்தை கவுதம் கம்பீரும் வெளிப்படுத்தினார். விளம்பரத்திலோ அது கிடையாது. அன்றைய நாள் தோனிக்குதான் சொந்தம்.

அதே சோடாவிற்கான மற்றொரு விளம்பரத்தில் தோனி 2013 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை நினைவுகூர்கிறார். மழையின் காரணமாக 20 ஓவர்களாக போட்டி சுருக்கப்பட்டது. மூன்று ஓவர்களில் இங்கிலாந்துக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. களத்தில் இருப்பதோ ஆபத்தான இயான் மார்கன் மற்றும் ரவி பொபாரா.

வழக்கம்போல் தோனி பேச ஆரம்பிக்கிறார், “ஒரு கிரிக்கெட் நிபுணராக இருந்தால் இந்தத் தருணத்தில் ஒரு சுழற்பந்துவீச்சாளரைப் பந்துவீச அழைத்திருப்பார், ஆனால் எனக்கு வேறு திட்டங்கள் இருந்தன”. தோனி இஷாந்த் ஷர்மாவிடம் பந்தைக் கொடுக்க, அந்த ஓவரில் மார்கன், பொபாரா இருவரையும் இஷாந்த் அவுட் ஆக்கிவிடுவார். அந்த ஓவரில் ஒன்பது ரன்களைக் கொடுத்தாலும், போட்டியின் போக்கு அந்த ஓவரில் மாறியது என்னவோ உண்மை.

ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கிய கதையாக எல்லாவற்றிற்கும் தோனியின் முடிவு மட்டும்தான் காரணம் என்று திரும்ப திரும்ப இந்த விளம்பரங்கள் தோனியின் பங்களிப்பை ஏற்றிக் கூறுகின்றன. இதற்குமுன் எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் எண்ணற்ற விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றிலெல்லாம் அந்த விளம்பரப் பொருளை அவர்கள் பயன்படுத்தியதும் அவர்கள் நன்றாக விளையாடுவதுபோல்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். முதுகு வலி தைலத்தைத் தடவியதும், நன்றாக டைவ் அடிப்பதுபோல், இப்படி. ஆனால் தோனியின் விளம்பரங்கள் அவரை அதீதமாகப் புகழ்கின்றன.

தோனியின் திரைப்படம் கூட இதே வரிசையில்தான் சேர்த்தி. விமர்சனத்திற்குரிய பல்வேறு தருணங்கள் திரைப்படத்தில் காட்டப்படவே இல்லை. திரைப்படம் உண்மை சம்பவங்களைப் பேசியே ஆகவேண்டும் என்பதில்லை, ஆனால் அத்திரைப்படத்தில் காட்டப்பட்டதைத் தாண்டி தோனி குறித்துப் பேச வேறு எதுவுமே இல்லை என்ற ரீதியில் திரைபடத்தின் தொனி அமைந்திருப்பதுதான் சிக்கல். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகத் தோல்வியடைந்தது, முட்கல் குழுவின் முன்னால் அளித்த வாக்குமூலம், அவையெல்லாம் உண்மையில் நிகழவே இல்லை போலும். அவையெல்லாம் பத்திரிகை நிருபர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய அவதூறுகள் போலும். அப்பொழுதுதானே அவர்களின் சகோதரர்களோ மகன்களோ தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பராக முடியும்?

தோனி உண்மையில் பிசிசிஐ அமைப்பின் கைப்பாவையா இல்லையா என்பதை தோனி திரைப்படம் காட்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அத்திரைப்படம் ஒன்றை மட்டும் நன்றாக உணர்த்துகிறது: தோனி சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதில் மிகவும் வல்லவர்.

ஆனால் இந்த கைப்பாவை அத்தியாயத்திற்கும் சுயதம்பட்டத்திற்கும் நடுவில் ஒரு முக்கியமான உண்மையை மறப்பது நம் தரப்பில் நாம் செய்யும் அநியாயமான செயலாகும். அந்த உண்மை, தோனி என்னும் மனிதர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகையில், அவர் இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக, இந்தியா பெற்ற தலைசிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக, ஒரு நாள் போட்டியின் தலைசிறந்த  ஃபினிஷர்களில் ஒருவராக சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படுவார்.

- குனல் சிங்

(தமிழில்: வ.விஷ்ணு)


This article was originally published in livemint: ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' - Kunal Singh
http://www.livemint.com/Sundayapp/Js66OMgL3IboznDct05NSK/MS-Dhoni-The-good-the-bad-and-the-ugly.html

Comments

  1. Mr.gunal sing pls give me ur address .I will answer for all ur questions

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்