Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இது வெறும் ஆரம்பம்தான்

இன்று எனக்கு நன்றாகத் தூக்கம் வரும் என்று நினைக்கிறேன். 721 பேரின் வாழ்க்கையை மீட்டெடுத்ததில் அடியேனுக்கும் சிறு பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது எதையோ சாதித்த உணர்வு மேலிடுகிறது.

தமிழக முதல்வரின் ஏழைகளுக்காக இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகப் புணரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவனைகளில் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 843 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 15 வருட சர்வீஸ் போட்டு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை தனியார் நிறுவனங்களில் சம்பளம் வாங்கி வந்தவர்கள், ஆயினும் அரசு வேலையாயிற்றே என்று அதை உதறித் தள்ளிவிட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக சென்ற வருடம் பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் பணியிடங்களுக்கு ஓப்பன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வர, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள். ஒரே வருடத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது.

இதை விடக்கூடாது என்று நானும் திலீபன் அண்ணாவும் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், நாளிதழ் செய்திகள், அரசாணைகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வின் விதிமுறைகள், மாநில மற்றும் துணைச்சேவையின் விதிமுறைகள் என்று இரண்டு நாட்கள் தூங்காமல் முழுவதுமாகப் படித்தோம். படிக்கப் படிக்க மருத்துவர்கள் பக்கம் இருந்த நியாயமும் கேள்வி கேட்க வேண்டியது அரசாங்கத்திடம்தான் என்றும் புரிந்தது. சில மருத்துவர்களிடம் பேசி, தகவல்களைத் திரட்டி, பயப்படாதீர்கள் என்று தைரியம் ஊட்டினோம். இந்நிலையில், கால்நடை மருத்துவர்களைப் பற்றி செய்திகள் அதிகம் வெளியே தெரிவதில்லை என்ற காரணத்தினாலோ என்னவோ, 500கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் சென்றும் இவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு முடிவு கிடைக்காமல் ஊருக்குத் திரும்பக்கூடாது இவர்கள் எல்லோரும் சென்னை மெரீனா கடற்கரையில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்துகொண்டனர்.

இதை எப்படியாவது மேலிடத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிடவேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்தோம். அங்கு இருந்த கால்நடை உதவி மருத்துவர்கள் பலரும் என் கைகளைப் பிடித்து, ‘உங்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்’, என்று கூறிய போது எனக்கு முற்றிலும் புதியதோர் உணர்வு மேலிட்டது.

இந்தப் பிரச்னை பற்றிய எங்களின் விரிவான கட்டுரை 21.04.13 ஜுனியர் விகடனில் வெளியானது. சற்று முன் ஒரு அரசு உதவி கால்நடை மருத்துவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “கட்டுரை வெளியானதும் என்ன மாயம் நடந்ததோ, டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றிலேயே முதல்முறையாக தேதி அறிவிக்காமல் தேர்வைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். முதல்வர் அவர்களின் நேரடிப் பரிசீலனையில் இப்பிரச்னை சென்றுள்ளதால் கிட்டத்தட்டத் தேர்வு ரத்தாகிவிடும்”, என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். “எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. ஒருநாள் வீட்டுக்குக் கண்டிப்பா திலீபனும் நீங்களும் வரணும்”, என்று சொல்ல, மனநிறைவுடன் நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தேன். ஒன்று மட்டும் புரிந்தது. இது வெறும் ஆரம்பம்தான், இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி