Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆணுறுப்பில் விழுந்த பல்லி

தூங்கச் செல்வதற்கு முன் ஒன்றுக்குப் போகையில் பல்லி ஒன்று என் உறுப்பில் விழுந்துவிட்டது. இதயம் ஒரு வினாடி நின்றே போய்விட்டது. பதறியடித்தபடி உதறினேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை.

அடுத்த நாள் காலை டாக்டரிடம் சென்றேன். “பல்லி உங்களைத் தீண்டியதா?” என்று கேட்டார். “அப்படியே விழுந்துவிட்டது” என்றேன். “அதன் நாக்கு பட்டதா?” என்றார். “அதெல்லாம் தெரியவில்லையே, உதறினேன் ஓடிவிட்டது”. “விழுந்த இடத்தில் இதைத் தடவவும்” என்று ஒன்றை எழுதிக்கொடுத்தார். ஜோசியக்காரரிடம் போகவே பயமாக இருந்தது.

தம்பியிடம் சொன்னேன். “சும்மா உளறாதே, இதெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு” என்றான். “அதுதான் நடந்துவிட்டதே!” என்று முறையிட்டேன். “என் அண்ணனுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று என் அறிவு ஏற்கனவே சிலவற்றைக் கற்பனை செய்து வைத்திருக்கிறது, ஒருவேளை நடந்துவிட்டால் தாங்கிக்கொள்வதற்காக. சாலை விபத்து, புற்றுநோய், தற்கொலை, மாரடைப்பு, மரம் சாய்வது, ஆனால் பல்லி இப்படி விழுவதெல்லாம் சாத்தியம் மிகமிகக் குறைவு. என்னால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, எனவே ஏற்க மாட்டேன்” என்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டான்.

இணையத்தில் தேடினேன். அங்கு பொதுவாகத் துணைக்குப் பலர் இருப்பார்கள். “ஆமாம் எனக்கும் நடந்தது” என்பது போன்ற பதிவுகள் இருக்கும். ஆனால் பல்லியை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களுக்குக் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி எதுவும் கண்ணில் படவில்லை.

ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். “ஆணுறுப்பில் விழுந்த பல்லி என்று பின்நவீனத்துவமாக எதையாவது எழுதவேண்டியது. அறிவுஜீவி என்று காட்டிக்கொண்டுவிடுவது” என்று வசைகள் வந்தன. நண்பர்கள் வழக்கம்போல் “அந்தப் பல்லிக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கிண்டலடித்தனர்.

யாருமே அதை நம்பியதுபோல் தெரியவில்லை. தனியாக இருப்பதுபோல் உணர்ந்தேன்.

இதற்காகவே பிறவியெடுத்ததுபோல் பக்கத்து வீட்டில் ஓர் தத்துவ அறிஞர் வாழ்ந்து வந்தார். இருபத்தி ஐந்து வயதுதான். எடுத்த எடுப்பிலேயே, “ஒரு பல்லி ஆணுறுப்பில் விழும் நிகழ்வை ஒரு ஐந்து வயது மூளையும் இருபது வயது மூளையும் அறுபது வயது மூளையும் வெவ்வேறு மாதிரி அனுபவிக்கும். ராபர்ட் போக் ஹாரிசன் சொல்லியிருக்கிறார்” என்றார்.

“சரி?”

“உங்கள் அனுபவம் எப்படி?”

“நான் கிளம்புகிறேன்”

“ப்ரோ வெய்ட். நான் உங்களை நம்புகிறேன்”

திரும்பிப் பார்த்தேன். இப்பிரபஞ்சத்தில் என்னை நம்பும் ஒரே சக உயிர் என்னை உட்காரும்படி புன்னகையுடன் சைகை செய்தது.

“என்னால் குறைந்தபட்சம் செய்ய முடிவது உங்களை நம்புவது மட்டுமே. உண்மையை என்னால் அறியவே முடியாது. நீங்கள், நான், எல்லோரும் மிகமிகத் தனியான தீவுகள். நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. நம்புவதுதான் ப்ரோ என் வேலையே”, என்றார்.

“திடீரென்று பல்லி அங்கு விழுந்தவுடன் தனிமையாக உணர்கிறேன். அதனால்தான் இங்கு வந்தேன். நானும் பல்லியும் மட்டும் தனியாக இருப்பதுபோல்”

“நோ நோ, நிலைமை இன்னும் மோசம். அந்தப் பல்லிக்கு மெய்ஞானமெல்லாம் கிடையாது. எப்படியோ கணக்கிட்டுத் தன்னிச்சையாக அங்கு விழுந்திருக்கிறது. எனவே பல்லிக்கு உங்கள் தனிமையில் இடமில்லை. அது ஆழ்மனது சும்மா உங்களை ஆற்றுப்படுத்துவதற்காக உருவாக்கும் கதை. உண்மையில் நீங்கள் மிகமிகத் தனியாக இருக்கிறீர்கள். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்”, என்று வகுப்பெடுத்தார்.

“தனிமையாக உணர்ந்ததால்தான் உங்களிடமே வந்தேன் என்றேன். இப்பொழுது நீங்களே மேலும் அழுத்துகிறீர்கள்”

“தனிமை உங்களை அழுத்தக்கூடாது ப்ரோ. எப்படி உணரவேண்டுமோ அதற்கு அப்படியே நேர்மாறாக உணர்கிறீர்கள். இதே என் உறுப்பில் பல்லி விழுந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?”

“என்ன செய்திருப்பீர்கள்?”

“விடுதலை கிடைத்ததுபோல் உணர்ந்திருப்பேன். இந்த மனிதத் திரளிலிருந்து என்னைத் தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணமாக அது அமைந்திருக்கும். எத்தனைப் பேருக்கு இது நடக்கும் சொல்லுங்கள்? ஒரு விண்கல் உங்கள் மண்டையைத் தாக்குவதைப் போன்றது இது, ஆனால் ஆபத்தில்லாதது.”

“டாக்டர் மருந்து கொடுத்திருக்கிறார்”

“இது உங்களின் அடையாளம். பொறாமையாக இருக்கிறது ப்ரோ. குறைந்தபட்சம் ஆணுறுப்பில் பல்லி விழுந்தவரின் பக்கத்துவீட்டுக்காரன் என்று தேற்றிக்கொள்கிறேன்”, என்றார்.

அந்த சூழலே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை இவர் சொல்வதுபோல் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ என்று மனது குழம்பியது. மேலும் கொஞ்சம் பேசினேன். அவரோ மேலும் கீழும் குதிக்காத குறையாகப் படபடவென்று இருந்தார். “இது உங்களின் தனித்துவ அடையாளம். மெய்யோடான உறவாடலில் உங்களுக்குக் கிடைத்த அரியதோர் கைரேகை. இது உங்களுக்கே உங்களுக்கானது”, என்று வணங்கினார்.

அவர் சொல்வதைக் கேட்கக் கேட்க சற்றே ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் இப்படிப்பட்டத் தீவிரவாதத் தனிமையை ஏற்கவும் பயமாக இருந்தது. “இப்படியெல்லாம் என்னை நான் தனித்துவப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. பல்லி விழுந்துவிட்டது, அவ்வளவுதான்”, என்றேன்.

“ஓ!", புன்னகை மறைந்துவிட்டது. "அது உங்கள் தேர்வு. நோ பிராப்ளம்.”

“தேங்க்ஸ். நான் கிளம்புகிறேன்”, என்றபடி எழுந்தேன். உரையாடல் சட்டென்று முடிந்துபோய்விட்டது. “சொன்னதற்கு நன்றி, உங்களை நான் நம்புகிறேன், உண்மையோ இல்லையோ” என்றபடி கையசைத்தார்.

வீடு வந்து சேர்ந்தேன். “இப்பொழுது என்ன? பல்லி விழுந்துவிட்டது, அவ்வளவுதானே, அதற்கு இவ்வளவு பதட்டம். நாளை ஆபீஸ் கான்பரன்ஸ் கால் வழக்கம்போல் இருக்கிறது, டாக்டர் கொடுத்த மருந்து இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, வாழ்க்கை வழக்கம்போல் போகப்போகிறது. விடு”, என்று தேற்றிக்கொண்டேன். தம்பி பதறியடித்தபடி ஓடிவந்தான்.

“டேய்! பல்லி! எனக்கும்!”

இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிவிட்டது.
 
===
 

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி