Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?

// கேள்வி: பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாலியல் தொழில் சீர்குலைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சேர்த்து கணக்கிட்டால் demonetisation-இன் நன்மைகள் என்று இதுவரை 194 விஷயங்களை சொல்லிவிட்டார்கள். சயீத் அன்வர் போல் 194 ரன்னில் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. டெண்டுல்கரைப் போல் அது இருநூறைத் தொட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு சின்ன நப்பாசை. - க.பாஸ்கரன்


பதில்: அன்புள்ள பாஸ்கரன். பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நன்மைகள் எப்பொழுதோ 200-ஐத் தொட்டுவிட்டது. பேனிக் ஆகிவிடுவீர்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன். But remember, don't panic!

195. சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி நம்மை ஒரு சூரியப் புயல் தாக்க இருந்தது தெரியுமா? ஆனால் நல்லவேளை, பிரதமர் அவர்கள் தொலைக்காட்சியில் ‘500, 1000 ஊ ஊ’ என்று அறிவித்தாலும் அறிவித்தார், அதன் விளைவாக தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவகையான மின்காந்த எதிர்வலைகள் எழுந்தன. அது சத்தமில்லாமல் விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயலைத் திசை திருப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

196. வட இந்தியாவில் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டை நீங்கள் காலம் காலமாக எழுப்பி வந்திருக்கிறீர்கள். பணமதிப்பு இழப்பின் இன்ஸ்பிரேஷன் எது தெரியுமா? நாட்டாமை படத்தில் விஜயகுமார் “செல்லாது செல்லாது” என்று சொல்லும் வசனத்தை நாங்கள் கேட்டோம். அதில் கவர்ந்திழுக்கப்பட்டுதான் இந்தத் திட்டமே உதயமானது. அதன் விளைவாக இன்று வட இந்திய ஊடகங்கள் தமிழகத்தின் நடப்புகளை உற்று கவனிக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வாரத்திற்கு ஒரு செய்தியாவது பிரைம் டைமில் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பணமதிப்புநீக்க நடவடிக்கையின் முக்கிய நன்மை இது.

197. நாட்டின் 86 சதவீத பணத்தை ஓவர் நைட்டில் நீக்கிவிட்டோம். அதனால் இந்தியாவின் எடையில் மாற்றம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட 2500 கோடி டன் அளவிற்கு எடை குறைந்துள்ளது. அதன் விளைவாக கடல் மட்டம் இரண்டு மீட்டர் அளவிற்குக் குறைந்து புதிய நிலப்பரப்புகள் மேலே வந்துள்ளன. ஆழ அமுக்கி முகக்கினும் என்று உங்கள் அவ்வை சொன்ன விஞ்ஞானத்தை எள்ளி நகையாடினோரின் மூக்கு இதன்மூலம் உடைபட்டிருக்கிறது.

198. ஒரு நாட்டின் பிரதமரை விட அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அதிக கையெழுத்துகளைப் போடுகிறார் என்பது எவ்வளவு பெரிய அவமானம்? அந்த அவமானத்தைத் துடைத்தெறிந்து, இனிமே நீ கையெழுத்து போடுவ, என்ற எச்சரிக்கையுடன் நாட்டின் மாண்பு காப்பாற்றப்பட்டிருக்கிறது.

199. நோ ஷேவ் நவம்பர் என்றொரு உலகப்பேரியக்கம் உண்டு. அதற்கு எங்களுடைய தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். அதன் விளைவாகவே ஆந்திர மாநிலத்தில் அர்ஜுன் ரெட்டி என்றொரு திரைப்படம் வெளியாகி, இன்று இந்திய பண்பாட்டுப் பிரதிபலிப்புகளின் ஒரு மணிமகுடமாக அது உருப்பெற்றிருக்கிறது.

200. கனடாவிற்குத் தெற்கே நெப்ராஸ்கா என்றொரு இடம் இருக்கிறது. அங்கிருந்து வடமேற்காக சென்றால் இடாஹோ என்றொரு இடம் வரும். அங்கிருந்து தெற்கில் எண்பது மைல் தொலைவில் உட்டாஹ் என்றொரு இடம் இருக்கிறது. அங்கே ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு தென்மேற்காக காரில் சென்றால் நான்கு மணி நேரத்தில் லாஸ் வேகாஸ் நகரத்தை அடைந்துவிடலாம். டீமானடைசேசனின் மகத்தான சாதனை இது.


200 வந்துவிட்டதா? உங்கள் ஆசை நிறைவேறியதா? குட். அந்த டெண்டுல்கரைப்போல் இதுவும் நாட் அவுட்தான். இன்னும் களத்தில் இருக்கிறோம், எனவே இன்னும் பல நன்மைகள் புதிதாக வந்துகொண்டே இருக்கும், கவலை வேண்டாம்.

இதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் 201-வது நன்மை எங்களுக்கு இருக்கிறது. அதாவது எங்களுக்கு காந்தியைப் பிடிக்காது. நாட்டின் 86 சதவீத காந்திகளை ஒழித்துவிட்டோம். எப்புடி? ஒரு இத்தாலியராக இருந்துகொண்டு நம்மை ஆள ஆசைப்படலாமா சொல்லுங்கள்?... என்ன? அது வேறு காந்தியா? ரைட் ரைட் ஏதோ ஒன்று. காந்திகளும் உங்கள் சந்தேகங்களும் தீர்ந்தால் சரி.//

- ‘அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?' நூலிலிருந்து...
#நூலிலிருந்து_சீரிஸ்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி